குன்றத்தூரில் அதிர்ச்சி! மேல்வீட்டு அக்கா திட்டியதால்.. 6ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
சென்னை: குன்றத்தூரில் அக்கம்பக்கத்தினர் திட்டியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர், துரைசாமி முதலி தெருவைச் சேர்ந்தவர் சிவா(40), இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இவரது மனைவி வசந்தி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

தற்கொலை
இவர்களது மகள் கோவூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். இரவு அவர்களது மகன் வீட்டிற்குச் சென்ற போது, வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளார். அப்போது அவரது சகோதரி உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.

போலீஸ் விசாரணை
சிறுவனின் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து இது தொடர்பாகக் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்ப இடத்திற்கு விரைந்து வந்த குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

என்ன காரணம்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதே குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் அங்கு இருக்கும் இளைஞருடன் பேசி பழகி வந்துள்ளார், இதனை அந்த சிறுமி அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் அந்த இளைஞரின் பெற்றோர் சிறுமியைக் கண்டித்தது மட்டுமல்லாமல், அவரது பெற்றோரிடம் இந்த விஷயத்தைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளனர். இதனால் அச்சமடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெரும் பரபரப்பு
மேலும் தன்னை யார் திட்டினார் என்பது குறித்தும் அந்த சிறுமி அவரது நோட்டில் எழுதி இருப்பதை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்துக் குன்றத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து அவரது தாய் கூறுகையில், "மேல் வீட்டில் வசிக்கும் பெண் மகளைத் திட்டியதால் அவள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகளின் சாவில் உள்ள சந்தேகத்தைத் தீர்க்க வேண்டும்" என்றார். அக்கம்பக்கத்தினர் திட்டியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications