இரு மொழிக் கொள்கைதான் எங்களுக்கு.. அடித்துச் சொன்ன முதல்வர்.. மத்திய அரசுக்கு அதிர்ச்சி!
சென்னை: விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், மும்மொழி கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிட்டதட்ட அதிர்ச்சி கொடுத்தார் என்றே சொல்லலாம்.
Recommended Video
மத்தியில் எந்த அரசு ஆட்சியில் அமர்ந்தாலும் அங்கு எடுக்கப்படும் கொள்கை முடிவுகளால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவர் என்றால் அதை எதிர்த்து தீரத்துடன் போராடிய முதல்வர்களில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் முக்கியமானவர்களாவர்.
இந்தி மொழி திணிப்பு, நீட் தேர்வு, காவிரி விவகாரம், பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது என இப்படி ஏராளமான கொள்கை முடிவுகளுக்கு இருவரும் தங்கள் எதிர்ப்பை கடுமையாக எதிர்த்து வந்தவர்கள்.

எதிர்க்கட்சிகள்
அப்படியிருந்த இருவரும் தற்போது உயிருடன் இல்லை. இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆரம்பத்தில் இந்த அரசை பாஜகவுக்கு அடிபணியும் அரசே என்றே எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. இதற்கு முக்கிய காரணம் நீட் தேர்வு. ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை பொசுக்கி விடும் என்பதால்தான் இந்த தேர்விற்கு ஜெயலலிதா எதிர்த்தார்.

போராட்டங்கள்
ஆனால் அவரது காலத்திற்கு பின்னர் இந்தத் தேர்வை மத்திய அரசு தமிழகத்திலும் புகுத்திவிட்டது. இதற்கு தமிழக அரசு மறுபரிசீலனை செய்யக் கோரியும் மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதுவரை 3 முறை நீட் தேர்வுகளும் நடத்தப்பட்டுவிட்டன. இதற்கான போராட்டங்களும் நீர்த்து போய்விட்டதே என்றே சொல்லலாம்.

மசோதா
ஆனால் அண்மைகாலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் நலனுக்காக போராடி வருகிறார். புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வர முயற்சித்து வருகிறது. ஆனால் இந்த மசோதாவால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தில் கைவைக்கும்படியாக உள்ளது. அது மட்டுமல்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தையும் ரத்து செய்யும் நோக்கில் இந்த மசோதாவை திருத்தி அமைக்க முடிவு செய்துள்ளது.

இலவச மின்சாரம்
இந்த மசோதாவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதனால் ஏற்படும் பாதிப்புகளையும் அவர்கள் பட்டியலிட்டனர். ஆனால் நம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ இலவச மின்சரத்தை ரத்து செய்யக் கூடாது என மத்திய அரசிடம் கறாராக சொல்லிவிட்டார்.

முக்கிய அம்சம்
அத்துடன் தமிழக அரசின் இலவச மின்சார திட்டத்திற்கு எதிரான பிரிவை நீக்க மத்திய அமைச்சர் ஆர் கே சிங்கிடம் கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார் எடப்பாடியார். இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அது போல் புதிய கல்விக் கொள்கை மூலம் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. அத்துடன் 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதும் அந்த கொள்கையின் முக்கிய அம்சமாகும்.

மும்மொழிக் கொள்கை
இந்த கொள்கைக்கு தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. கல்வியாளர்களும் இந்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவே இருந்தது. இந்த நிலையில் இன்று முதல்வர் பள்ளிக் கல்வி, உயர் கல்வித் துறை அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை இல்லை என மீண்டும் ஒரு முறை முதல்வர் பொட்டில் அடித்தாற் போல் கூறிவிட்டார்.

வேதனை வருத்தம்
அவர் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி முறை இடம் பெற்றிருப்பது வேதனை, வருத்தம் அளிக்கிறது. தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். மும்மொழிக் கொள்கையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் முதல்வர்.

மும்மொழிக் கொள்கை
இதன் மூலம் இலவச மின்சாரம் ரத்து, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராகவே செயல்பட்ட முதல்வர் இன்று மக்கள், எதிர்க்கட்சிகளின் மனங்களில் ஓங்கி நிற்கிறார். மேலும் மத்திய அரசும் தற்போது முதல்வரின் நடவடிக்கைகளால் ஜெர்க்காகி நிற்கிறது. மேலும் தமிழகத்தில் 5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்தும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
மேலும் கொரோனா சோதனை செய்ய தமிழகத்தில் அதிக சோதனை கூடங்களையும் போராடி பெற்றார் முதல்வர். இது போல் தமிழ் மொழி, தமிழக மக்கள், சட்டம் ஒழுங்கை காப்பது, தமிழகத்தின் உரிமைகளுக்காக என்று இன்று போல் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குரல் கொடுத்து வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications