முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா நெகட்டிவ்.. விஜயபாஸ்கர் சொன்ன தகவல்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு நெகட்டிவ் என்று வந்துள்ளதாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
வீடியோவாயிலாக இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார் விஜயபாஸ்கர். அப்போது அவர் கூறியதாவது:
இன்று ஒரே நாளில், தமிழகத்தில், 26,592 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம், 9,19,204 பேருக்கு தமிழகத்தில் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

அதிக பரிசோதனை
9 லட்சத்திற்கு அதிக பரிசோதனை செய்துள்ளோம். மருந்து அல்லது தடுப்பூசி இல்லாத ஒரு நோய்க்கு, சிகிச்சையளித்து வருகிறார்கள். தமிழகத்தில் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 34,112 பேர். இன்று மட்டும், மருத்துவமனைகளிலிருந்து 1358 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
தமிழகத்தில், 55 சதவீதம் என்ற அளவில், குணமடைவோர் விகிதம் உள்ளது.

மகிழ்ச்சி தகவல்
தமிழகத்தில், கொரோனா இரட்டிப்பாகும் விகிதம் 16 நாட்களாக உள்ளது. எனவே தமிழக மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் சரியான பாதையில்தான் சென்று கொண்டுள்ளது. ஏப்ரல், மே மாதம் 7 நாட்களில், கொரோனா பரவல் இரட்டிப்பானது. ஆனால் இப்போது குறைந்துள்ளது. அதிக பரிசோதனைகள், தக்க சிகிச்சை போன்றவை இரட்டிப்பு விகிதத்தை குறைத்துள்ளன.

பிளாஸ்மா சிகிச்சை
பிளாஸ்மா சிகிச்சை வெற்றிகரமாக உள்ளது. உயிர்காக்கும் மருத்துவமுறையாக பிளாஸ்மா சிகிச்சை மாறியுள்ளது. ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு ரெம்டெசிவிர் மருந்துகள் தருவிக்கப்பட்டுள்ளன. வேறு பல உயிர்காக்கும் மருந்துகள் தருவிக்கப்பட்டுள்ளன.

எடப்பாடி பழனிச்சாமி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில், மகிழ்ச்சியளிக்கும் தகவலாக, அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்திக்கு கொரோனா பாசிட்டிவாகியுள்ளது. நோய் தொற்றுக்கு வாய்ப்புள்ளது தெரிந்தும், பல மாதங்களாக, கொரோனா நோயாளிகளுடன் நெருங்கி பழகி சிகிச்சைகளை மேற்பார்வை செய்தவர் ராஜிவ்காந்தி மருத்துவமனை டீன். இந்த நிலையில்தான் அவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications