"பாஜக இந்திய ஜனநாயகத்தை பட்டப் பகலில் கொள்ளையடிக்கிறது.. வேடிக்கை பார்க்க முடியாது” ஸ்டாலின் காட்டம்
சென்னை: தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. பாஜக இந்தியாவின் ஜனநாயகத்தை பகலில் கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாகப் பார்க்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களில் ஏராளமான வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். மேலும், பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறது என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முன்னணி தலைவருமான ராகுல் காந்தி, கர்நாடகாவின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், 12,000 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு தேர்தல் ஆணையம் அவரிடம் இருந்து உறுதிமொழி பத்திரம் கேட்டிருந்தது. இந்நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக இணையவழி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இதில் மக்கள் இணையவும் அழைப்பு விடுத்துள்ளது. டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
ஸ்டாலின் கண்டனம்
இந்நிலையில், ராகுல் காந்தி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு, தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
இது குறித்து தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. பெங்களூரின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் தீர்ப்பை திருடுவதற்கான திட்டமிட்ட சதி.
🗳️ The BJP has turned the Election Commission into its poll rigging machinery. What happened in #Bengaluru's #Mahadevapura is not an administrative lapse, it is a calculated conspiracy to steal the people’s mandate.
— M.K.Stalin (@mkstalin) August 11, 2025
🗳️ The #VoteTheft evidence presented by my brother and LoP… pic.twitter.com/7wrh5ETU1z
தீவிர மோசடி அம்பலம்
எனது சகோதரரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி, இந்த தீவிர மோசடியை அம்பலப்படுத்தி இருக்கிறார். ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியினர், நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணியாகச் சென்று கோரிக்கையை வலியுறுத்த இருக்கிறோம்.
ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களுக்கு திமுக தோளோடு தோள் நிற்கும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் கணினிகள் மூலம் படிக்கக்கூடிய முழுமையான வாக்காளர் பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.
பட்டப்பகலில் ஜனநாயக கொள்ளை
அரசியல் ரீதியாக வாக்காளர் பட்டியல்களில் வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நமது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட நாசவேலை குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக, இந்தியாவின் ஜனநாயகத்தை பட்டப் பகலில் கொள்ளையடிப்பதை நாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications