நேற்று ஆரம்பித்த கட்சி.. நாங்க தான் அடுத்த முதல்வர் என பிதற்றுகிறார்கள்! முதல்வர் ஸ்டாலின் அட்டாக்!
சென்னை: கட்சி தொடங்கிய உடனேயே ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லும் நிலை இன்றைக்கு நாட்டிலே இருந்து கொண்டிருக்கிறது, நாங்கள்தான் அடுத்த ஆட்சி நாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று சிலர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, பொதுச் செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் ஏராளமானோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ," திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, ஏதோ நேற்று முளைத்த காளான் அல்ல. 1949-இல், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய நேரத்தில், வடசென்னை பகுதியில் இருக்கும் ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் துவக்கி வைத்தபோது அவர் சொன்னார், "திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, ஆட்சிக்காக அல்ல; ஆட்சிக்கு வர வேண்டும் - பதவியில் அமர வேண்டும் என்பதற்காக அல்ல;
மக்களுக்குப் பணியாற்ற வேண்டும்; ஏழை எளியவர்களுக்குத் தொண்டாற்ற வேண்டும்; பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்டிருக்கும் மக்களுக்காகப் பாடுபட வேண்டும்; ஒட்டுமொத்தத் தமிழினத்திற்காக உழைத்திட வேண்டும் என்ற உணர்வோடுதான் இந்த இயக்கம் துவக்கப்படுகிறது" என்று அறிஞர் அண்ணா அவர்கள் உறுதி எடுத்துக் கொண்டு இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்கள். அதற்குப் பிறகு, படிப்படியாகக் கழகம் வளர்ந்து வளர்ந்து, 1957-ஆம் ஆண்டு, முதல் தேர்தல் களத்திலே நாம் ஈடுபட்டோம்.
1949-இல் தொடங்கி, 1957-இல்தான் தேர்தல் களத்திற்கே வந்தோம். ஆனால், இன்றைக்குச் சில கட்சிகளைப் பார்க்கிறோம். தொடங்கிய உடனேயே ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லும் நிலை இன்றைக்கு நாட்டிலே இருந்து கொண்டிருக்கிறது. நாங்கள்தான் அடுத்த ஆட்சி; நாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று சிலர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். நான் அது யார்? எப்படிப்பட்டவர்? எந்தக் கட்சி? எந்தக் கட்சித் தலைவர் என்றெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. காரணம், அவர்களையெல்லாம் நான் அடையாளம் காட்டுவதற்குத் தயாராக இல்லை. அதுதான் உண்மை.
அவர்கள் பெயரைச் சொல்லி இந்த மேடைக்குரிய அங்கீகாரத்தை, கவுரவத்தை நான் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதுதான் உண்மை. அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். நானாக இருந்தாலும் சரி; தம்பி உதயநிதியாக இருந்தாலும் சரி; அண்ணன் துரைமுருகனாக இருந்தாலும் சரி, என்ன சொன்னோம்? மாற்றுக் கட்சி என்றுதான் சொன்னோம். அந்தக் கட்சியின் பெயரைக்கூட சொல்ல எங்கள் வாய் வரவில்லை. எத்தனையோ கட்சிகள் இருக்கிறது.
எத்தனையோ கட்சியின் பெயரைச் சொல்கிறோம். ஆனால், இந்தக் கட்சியின் பெயரைச் சொல்ல நாங்கள் மறுப்பதற்கு என்ன காரணம்? உண்மையிலேயே ஒரு அரசியல் கட்சியாக இருந்து - மக்களுக்காகப் பாடுபடும் கட்சியாக இருந்து - மக்களுக்காக உழைக்கும் கட்சியாக இருந்து - உண்மையிலேயே, தமிழர்களுக்காகப் பாடுபடும் கட்சியாக இருந்தால் சொல்லலாம். வேஷமிட்டுக் கொண்டிருக்கும் - ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பவர்களை எல்லாம் நான் அடையாளம் காட்ட விரும்பவில்லை." என கூறினார்.












Click it and Unblock the Notifications