“ஆசை தப்பில்ல”.. மனம் திறந்த ஸ்டாலின்! அமைச்சரவை மாற்றம் பற்றி மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஓபன் டாக்
சென்னை: அமைச்சராக ஆசைப்படுவதில் தவறில்லை என்றும், அதே நேரம் வாய்ப்பு கிடைக்காவிட்டால் அதையே நினைத்து ஏங்கிவிட வேண்டாம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசி உள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 72 மாவட்ட திமுக செயலாளர்கள், திமுக தொகுதி பார்வையாளர்கள், திமுக மாநில நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், திமுக முன்னாள் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தல், பூத் கமிட்டி, திமுக உறுப்பினர் சேர்க்கை, திமுக தொண்டர்களிடம் நடந்துகொள்ளும் விதம், அமைச்சர் பதவி என பல்வேறு விசயங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது குறித்தும், கட்சிப் பதவிகள் குறித்தும் ஸ்டாலின் விளக்கமளித்து இருக்கிறார். அதில், "ஒரே நேரத்தில் அனைவருக்கும் பதவிகளும், பொறுப்புகளும் கிடைத்துவிடுவதில்லை. சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் அமைச்சராக ஆசைப்படுவதில் தவறில்லை.
அமைச்சராவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அதையே நினைத்து ஏங்கிப்போக வேண்டிய அவசியமும் இல்லை. பல தொண்டர்களுக்கு சட்டமன்ற உறுப்பினராவதற்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
வாய்ப்புகள் சிலருக்கு மட்டுமே வரும். மற்றவர்கள் காத்திருப்பார்கள். நிச்சயமாகஉழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
அதே நேரம் நம்மிடம் உள்ள பதவி, பொறுப்பை வைத்து கட்சியில் இருக்கும் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தவும் உற்சாகமூட்டவும் வேண்டும். இயக்கம் என்பது கட்சித் தலைமை தொடங்கி, கடைக்கோடி தொண்டன் வரை உளப்பூர்வமாக பிணைந்திருக்கும் ஒரு அமைப்பாகும். ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொருவருக்கும் ஆதரவும் அன்பும் இருக்க வேண்டும்.
இது 'நம்முடைய ஆட்சி' என்று தொண்டர்கள் பெருமையோடும் மகிழ்ச்சியோடும் இருக்க வேண்டும். அப்படி அவர்கள் இருக்கிறார்களா என்று நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால், ஏன் இல்லை என்ற காரணத்தை ஆராய்ந்து சரி செய்ய வேண்டும். எந்த இடத்திலும் சுணக்கமோ, மனவருத்தமோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு.
ஒவ்வொரு தொண்டனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தொண்டர்கள் யாராவது, எதாவது குறைகள் சொன்னால், என்ன சொல்கிறார்கள் என்று காது கொடுத்துக் கேட்க வேண்டும். பிரச்சினையை தீர்க்க முடியுமா என்று பாருங்கள். குறை சொல்பவர்களிடம் ஆறுதலாக பேசினாலே, நமது குறைகளை கேட்பதற்கு ஆள் உள்ளது என்ற நம்பிக்கை வரும். அதுவே பலருக்கு பாதிப் பிரச்சனைகளை தீர்ந்துவிடும். மனதில் இருக்கும் பெரிய பாரம் குறைந்துவிடும்." என்று பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications