முதல்வர் ஸ்டாலின் அதிரடி.. ஒலிம்பிக் சென்றுள்ள 2 வீராங்கனைகளுக்கு அரசு வேலை.. வந்தது உத்தரவு
தமிழக வீராங்கனைகள் 2 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட உள்ளது
சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள சுபா வெங்கடேசன், தனலட்சுமிக்கு அரசு வேலை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில், தமிழகத்திலிருந்து 5 போட்டியாளர்கள் தேர்வாகி உள்ளனர்..
அதாவது ஆடவர் பிரிவில் ஆரோக்கியராஜ், நாகநாதன் பாண்டியனும் கலப்பு ஓட்டத்தில் தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன், ரேவதி வீரமணி ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.

2 பெண்கள்
இதில் தனலட்சுமி, சுபா வெங்கடேசன் இருவருமே திருச்சியை சேர்ந்தவர்.. பயிற்சி செலவுகளை கூட சமாளிக்க முடியாத அளவுக்கு சிரமத்துக்கு ஆளானவர்.. அப்படி இருந்தும், கடுமையாக உழைத்து தன்னம்பிக்கையுடன் ஒலிம்பிக்கிற்கு சென்றுள்ளார்... அதேபோல, சுபா வெங்கடேசனும் மிகுந்த வறுமையில்தான், பலவித கனவுகளுடன் ஒலிம்பிக்கிற்கு சென்றுள்ளார்.

அரசு பணி
இதையடுத்து, சர்வதேச அளவிலான 8 போட்டிகளில் பங்கேற்று 3 போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார் சுபா வெங்கடேசன்.. சுபாவுக்கு அரசுப்பணி கிடைக்கவில்லை என்று ஏற்கனவே ஒருபேட்டியில் வருத்தம் தெரிவித்திருந்தார்.. மேலும் இந்த போட்டியில் முழு திறனையும் வெளிப்படுத்தி பதக்கத்தை வெல்ல முடியும் என்றும் நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

சிரமம்
இந்நிலையில், கடும் சிரமத்துடன், மிகுந்த வறுமையிலும் போராடி ஒலிம்பிக் வரை சென்றுள்ள சுபா வெங்கடேசன், தனலட்சுமிக்கு அரசு வேலை வழங்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம்.. இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், சொன்னதாவது

அமைச்சர் பேட்டி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உற்சாகப்படுத்தும் வகையில் "வென்று வா வீரர்களே" என்ற பாடலை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.. 200 நாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் சிறப்பான முறையில் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்..

ஒலிம்பிக்
தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட்டு உள்ளது.. சர்வதேச அளவில் தமிழக வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடும் சிரமத்துடன், மிகுந்த வறுமையிலும் போராடி ஒலிம்பிக் வரை சென்றுள்ள சுபா வெங்கடேசன், தனலட்சுமிக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.. அவர்கள் இருவரும் தாயகம் திரும்பிய உடன் அரசு பணிக்கான ஆணையை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" என்றார்.

ஊக்கத்தொகை
முன்னதாக, தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் செல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்... அதுமட்டுமில்லாமல் தங்கம் வென்றால் ரூ.3 கோடி, வெள்ளி வென்றால் ரூ.2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications