நீங்க சொல்லுங்க முதல்வரே.. போட்டோவை போட்டு காயத்ரி ரகுராம் ஸ்டாலினிடம் எழுப்பிய கேள்வி..!
முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பி உள்ளார் தமிழக பாஜகவின் காயத்ரி ரகுராம்
சென்னை: மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்து வரும் முதல்வர் ஸ்டாலினின் போட்டோ ஒன்றை பதிவிட்டு கேள்வி எழுப்பி உள்ளார் பாஜகவின் காயத்ரி ரகுராம்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையின் காரணமாகத் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களின் முக்கிய நகரங்கள் குளங்களாக மாறி விட்டன.. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன... மின்சாரம் பல்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது..
சாலை, ரயில் போக்குவரத்துகளும் பெரும்பாலான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.. சுரங்கப்பாலங்கள் மூடப்பட்டுள்ளன.. மொத்தத்தில் மக்களின் இயல்பு வாழ்வை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்கள்
குறிப்பாக,சென்னை அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.. மாநகராட்சி நிர்வாகம் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.. மாநகராட்சி ஊழியர்கள் 3 நாட்களாகவே மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாழ்வான தெருக்கள், சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற மட்டுமே, மாநகராட்சி சார்பில் அலுவலர்கள், பணியாளர்கள் என மொத்தம் 23 ஆயிரம் நபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முதல்வர்
சென்னையில், மழை நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் கடந்த 3 நாட்களாகவே நேரடியாக களத்தில் இறங்கி மழை வெள்ள பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார்.. பாதிக்கப்பட்ட அந்தந்த பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்.. அதேபோல அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. வீடுகளுக்குள் புகுந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மும்முரமாகி உள்ளனர்.

ஸ்டாலின்
இதனிடையே, முதல்வரின் நேரடி ஆய்வை பாஜக விமர்சித்து வருகிறது.. அந்த வகையில், தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவருமான காயத்ரி ரகுராமும விமர்சித்துள்ளார்.. இது தொடர்பாக தன்னுடைய ட்வீட்டில் ஒரு போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.. ஒரு பகுதியில் மழை வெள்ள பாதிப்பை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தபடியே வருகிறார்.. அப்போது அங்கிருக்கும் வீடுகளில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதவாறு, கயிறு கட்டி வைக்கப்பட்டுள்ளது.

வணக்கம்
இதனால் வீட்டிற்குள்ளிருந்தபடியே அந்தந்த வீட்டினர் முதல்வருக்கு வணக்கம் தெரிவிக்கிறார்கள்.. முதல்வரும் பதிலுக்கு வணக்கம் சொல்லியபடி மழைநீரில் நடந்து செல்கிறார்.. இந்த போட்டோவை பதிவிட்ட காயத்ரி ரகுராம், "இது செயல்படும் அரசா இல்லை செய்திக்கான அரசா நீங்களே சொல்லுங்கள் முதல்வரே" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.. அத்துடன் வீட்டின் முன்பு கட்டப்பட்ட அந்த கயிறை சிவப்பு கலரில் குறிப்பிட்டு சுட்டிக்காட்டி உள்ளார்.

கொத்தடிமைகள்
இந்த பதிவுக்கு ஏராளமானோர் திரண்டு வந்து, "மழை பாதிப்பு பார்க்க செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வீடுகளுக்குள் அடைக்கப்பட்டு கயிறு கட்டப்பட்டு கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகிறார்களே? எதை பார்த்து முதல்வர் பயப்படுகிறார்? என்றும், மக்களை திரும்பி கூட பார்க்காமல் வணக்கம் சொல்கிறாரே? என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இதற்கு வழக்கம்போல் திமுகவினர் திரண்டு வந்து பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.. அத்துடன் மாநில பாஜக தலைவர், நிவாரண பணியில் ஈடுபட்ட வீடியோவையும் ஷேர் செய்து பதில்கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications