விமர்சனங்களால் வளர்ந்தவன் நான்! யாராவது எதிர்த்தால் தான் உற்சாகமாகச் செயல்படுவேன்! ஸ்டாலின் பேச்சு!
சென்னை: விமர்சனங்களாலேயே வளர்ந்தவன் நான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
மேலும், யாராவது எதிர்த்தால் தான் தாம் மேலும் மேலும் உற்சாகமாகச் செயல்படுவேன் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இதேபோல், விமர்சனங்களை விரும்பினாலும் கூட விதண்டாவாதங்களை விரும்பமாட்டேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

பொத்தாம் பொதுவாக
பொத்தாம் பொதுவாக, எந்த வாக்குறுதியையும் திமுக ஆட்சி நிறைவேற்றவில்லை என்று சிலர் சொல்லிக்கொண்டே வருகிறார்கள். இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே அவர்களைப் பார்த்து நான் கேட்கின்ற கேள்வியெல்லாம், மக்களோடு மக்களாக வந்து - மக்களிடத்தில் வந்து நீங்கள் கேட்க வேண்டும்.ஏதோ பேட்டி கொடுப்பதற்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வந்து, பேட்டியைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் சென்று உட்கார்ந்து கொள்பவர்களுக்கு புரிந்துகொள்ள முடியாது. தமிழ்நாட்டு மக்கள் அடையும் நன்மைகளைப் பற்றி எதுவும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியாது!

விமர்சனத்தில் வளர்ந்தவன்
தனிப்பட்ட ஸ்டாலினை விமர்சிப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, ஏனென்றால் நான் விமர்சனத்தில் வளர்ந்தவன்! இன்னும் சொன்னால், விமர்சனங்களாலேயே வளர்ந்தவன் நான்! எதிர்ப்பையும், அடக்குமுறைகளையும் மீறி வளர்ந்தவன்தான் நான்! யாராவது எதிர்த்தால் தான் நான் மேலும் மேலும் உற்சாகமாகச் செயல்படுவேன். அதே நேரத்தில், என்னை எதிர்ப்பதன் மூலமாக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டு மக்களின் மேம்பாட்டுக்கு, குந்தகம் விளைவிக்க நினைத்தால் அதனை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

விதண்டா வாதங்கள் வேண்டாம்
விமர்சனங்களை விரும்புவன் தான் நான். ஆனால் விதண்டாவாதங்களை அல்ல!வழிகாட்டுதல்களை ஏற்றுக் கொள்பவன்தான் நான். ஆனால் பயனற்ற சொற்களை அல்ல! சொந்தக் கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில், தங்களது கையாலாகாத்தனத்தை மறைப்பதற்கு, திசை திருப்புகிற நோக்கத்தோடு திமுக அரசை இன்றைக்கு விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள், திமுக அரசை விமர்சிப்பதற்கு தகுதியோ, யோக்கியதையோ, கிஞ்சிற்றும் கிடையாது என்பதை நான் அழுத்தந்திருத்தமாக தெரிவிக்க விரும்புகிறேன்.

வளம் கொண்ட மாநிலம்
காரணம் இந்த ஓராண்டு காலத்தில், ஓராயிரம் திட்டங்கள்! ஓன்றரை வருடம் தான், இன்னும் ஒன்றரை வருடம் ஆகவில்லை, அதற்குள் இவ்வளவு திட்டங்கள். நினைத்துப் பாருங்கள், ஒரு வருடத்தில் இவ்வளவு என்றால், ஐந்தாண்டு வருடங்களில், அளப்பரிய திட்டங்களை நிறைவேற்றித், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக, உலகில் அனைத்து வளம் கொண்ட மாநிலமாக ஆக்குவதே எங்களுடைய இலட்சியம்.












Click it and Unblock the Notifications