உதயநிதி பிறந்த நாள்... கட் அவுட்,பேனர்கள் வைத்தால் கட்சியில் இருந்து கட்டம்- ஸ்டாலின் கறார் உத்தரவு!
சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு கட் அவுட், பேனர் வைக்கும் கட்சி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திமுகவின் இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று 44 வது பிறந்தநாள். திமுக ஆட்சியில் முதன்முறையாக எம்.எல்.ஏ.வாகி, வருகிற முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் உதயநிதியின் பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாட விரும்பியதாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பம். இதற்காக,அமைச்சர்களுக்கும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் கட்டளைகள் பறந்திருந்தன. அதனையடுத்து, திமுகவில் பரபரப்பு உருவானது. ஏற்பாடுகளும் வேகமெடுத்தன.

பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை
ஆனால், தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் விவசாயிகளும், மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் போது, உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்தனர் சீனியர் தலைவர்கள். உளவுத்துறை ரிப்போர்ட்டும் அதையேத்தான் முதல்வரிடம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, உதயநிதியிடமும், அறிவாலயத்தின் முக்கிய நிர்வாகியிடம் பேசினார் ஸ்டாலின். உடனே, "உதயநிதியின் பிறந்தநாளில் கொண்டாட்டங்களை தவிர்க்கவும். பேனர், கட் அவுட்டுகள் கூடாது. முடிந்த அளவுக்கு மக்கள் நல உதவிகள் செய்யுங்கள் " என மாவட்ட நிர்வாகிகளுக்கும், இளைஞரணியினருக்கும் உத்தரவிட்டார் அந்த அறிவாலய நிர்வாகி.

முதல்வர் ஸ்டாலின் கறார் உத்தரவு
இதனையறிந்து கோபமடைந்த ஸ்டாலின், காவல்துறை உயரதிகாரிகளிடம், உதயநிதி பிறந்த நாளில் கட் அவுட் , பேனர்கள் கொண்டாட்டம் இருக்கக் கூடாது. மீறி அப்படி நடந்தால், அந்த கட் அவுட்டுகளையும் பேனர்களையும் போலீசார் மூலம் அப்புறப்படுத்தி விட்டு அவைகளை வைத்த கட்சி நிர்வாகிகளின் பெயர்களை மட்டும் என்னிடம் தாருங்கள் " என உத்தரவிட்டிருக்கிறார்.

கண்காணிக்கும் காவல்துறை
இதனால், உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கட் அவுட் , பேனர்கள் இருக்கிறதா என கண்கொத்திப் பாம்பாக தமிழகம் முழுவதும் கண்காணித்தபடி இருந்தது தமிழக காவல்துறை. தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்படாதவர்களை சீரியசாகவே கட்டம் கட்ட வேண்டுமென்பதற்காகத்தான் உயரதிகாரிகளுக்கு அந்த உத்தரவை பிறப்பித்தாராம் ஸ்டாலின் என்கிறது காவல்துறை வட்டாரம்.

அமைச்சர்களின் வாழ்த்துகள்
இதனிடையே உதயநிதியின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்துச் சொல்ல நேற்றே அவரது வீட்டுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் என பலரும் படையெடுத்தனர். அப்போது வீட்டில் உதயநிதி இல்லை. வெகு நேரம் காத்திருந்தனர். பிறந்தநாளையொட்டி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிகொண்டிருந்த உதயநிதி, அந்த நிகழ்ச்சியை வேகவேகமாக முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அமைச்சர்களை பார்த்ததும், "மன்னிச்சிடுங்க. இன்னைக்கே வீட்டுக்கு வருவீங்கன்னு யோசிக்கலை. நீங்க காத்திருந்தது எனக்கு கவலையா இருக்கு " என பணிவாக அவர் பேசியதைக் கண்டு அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் ஆச்சரியப்பட்டனர். உதயநிதிக்கு வாழ்த்துகளைச் சொன்னார்கள்.அதனை ஏற்றுக்கொண்டு நன்றி சொன்ன உதயநிதி, " உங்க மாவட்டத்துல எந்த ஆடம்பரமும் கூடாது. நலத்திட்ட உதவிகள் மட்டும்தான் செய்யணும் அண்ணே !" என்று வாழ்த்திய அமைச்சர்களிடம் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் உதயநிதி.












Click it and Unblock the Notifications