ரூ.39 கோடியில்.. சென்னை நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்.. அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் ரூ.39 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதன்படி இன்று காலை முதல்வர் ஸ்டாலின் ஹஜ் இல்லம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசில் தமிழகத்தில் உள்ள அனைவரையும் போல் சிறுபான்மையின மக்களும் சம உரிமையுடன் வாழ்வதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. அரசு நிறைவேற்றும் திட்டங்கள் அனைத்தும் சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய சமுதாய மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதை அவர்களின் வாழ்நாள் கடமைகளில் முக்கியமானதாக கருதுகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமிய மக்களும் ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். ஆண்டுதோறும் சென்னை வரும் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் செல்வதற்கு ஒரு நாள் முன்பாக அங்கு தங்கி செல்வதற்கு வசதி செய்ய தமிழக அரசு முன்வந்துள்ளது.
இதன்படி தான் சென்னை விமான நிலையம் அருகே தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இதன்படி, சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் அரசு நிலப்பரப்பில் ரூ.39 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஹஜ் இல்லம் கட்ட முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு ஹஜ் இல்லமானது நாள் ஒன்றிற்கு ஏறத்தாழ 400 ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப கட்டப்பட இருக்கிறது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், இஸ்லாமியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications