தமிழக அலங்கார ஊர்தியை நிராகரித்தது ஏமாற்றம், வேதனை: பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை நிராகரித்தது ஏமாற்றமும் வேதனையும் தருவதாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
Recommended Video
நாட்டின் குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் ஜனவரி 26-ல் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், மத்திய அரசு துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி அளிக்கும் விவகாரம் சர்ச்சைக்குரியதாகி வருகிறது.

தமிழக ஊர்திக்கு அனுமதி இல்லை
இந்த ஆண்டு தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், ஜான்சி ராணி பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஆங்கிலேயருடன் போரிட்டு வீழ்த்திய வீரமங்கை வேலுநாச்சியார், மாவீரர்கள் மருது சகோதரர்கள் உள்ளிட்டோர் குறித்த விவரங்களுடன் தமிழக அரசு அலங்கார ஊர்தி வடிமைக்கப்பட்டது.

தமிழகத்தில் அதிர்ச்சி- கண்டனம்
ஆனால் இவர்களைவிட பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு பலமுறை தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் திருத்தம் செய்தது. ஆனாலும் தற்போது தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசின் இந்த போக்குக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளன.

மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி, மகாகவி பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி உடனே இதில் தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமி்ழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 முறை திருத்தம்
அக்கடிதத்தில் மத்திய அரசு, தமிழக அலங்கார ஊர்தியில் 7 முறை திருத்தம் செய்ய கூறியது. அப்படி திருத்தங்கள் செய்தும் அனுமதி மறுப்பது வேதனையைத் தருகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகாவை தவிர இதர மாநிலங்களின் ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில அரசின் அலங்கார ஊர்திக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications