சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்காக முதல்வர் பழனிச்சாமி வங்கிகளிடம் வைத்த முக்கிய வேண்டுகோள்
சென்னை: தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் என்று தனியார் வங்கிகள் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு -முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழத்தில் உள்ள வங்கியாளர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலர்கள், நபார்டு வங்கி அலுவலர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது குறித்தும், சுய உதவிக் குழுக்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்குவது குறித்தும் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

பொருளாதார சீர்திருத்தம்
அப்போது முதல்வர் பழனிச்சாமி பேசும் போது, உலகமே கொரோனா பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கும் சவாலான இக்கால கட்டத்தில், கொரோனா தொற்றைத் தடுப்பதற்கும், இந்த நோயினால் ஏற்படும் தாக்கத்தை குறைப்பதற்கும், கடந்த நான்கு மாதங்களாக தமிழக அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து வருவதன் காரணமாக, தமிழ்நாட்டில் பூரண குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை மிக அதிகமாகவும், இந்த நோயினால் ஏற்படும் இறப்பு மிகக் குறைவாகவும் தமிழகத்தில் உள்ளது. இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு. ரங்கராஜன் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்திட ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்து நான் உத்தரவிட்டேன். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வழிவகை செய்யும் விதமாக இன்று நடைபெறும் மாநில அளவிலான வங்கிகளின் குழு கூட்டத்தில் கலந்துகொள்வதை நான் எனது கடமையாகக் கருதுகிறேன்.

4,21,404 கோடி ரூபாய் முதலீடு
தமிழ்நாட்டில் சேவையாற்றும் நீங்கள், தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடும் விதமாக, திரளாக இங்கே பங்கேற்றுள்ளீர்கள். அதற்காக உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். ஊரடங்கின் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்கள் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளன. இந்த சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பல்வேறு முயற்சிகள் மற்றும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளன. பல்வேறு தொழில்களுக்கு இந்த நேரத்தில் அத்தியாவசியத் தேவை வங்கிகளின் கடன் உதவி தான்.
தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக கடன் வைப்பு தொகை விகிதம் நூறு சதவீதத்தை காட்டிலும் அதிகமாகவே இருந்துள்ளது. இது, தமிழ்நாட்டில் தொழில் செய்வதற்கு தொழில் நிறுவனங்கள் கடன்களை பெற அதிகளவில் முன்வருகிறார்கள் என்பது மட்டுமல்லாமல், வங்கிகளும் முனைப்போடு செயல்படுவது தெளிவாகிறது. இது போன்ற ஒத்துழைப்பை நான் உங்களிடமிருந்து இக்கால கட்டத்தில் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். இந்த ஆண்டிற்(2020-21)கான 4,21,404 கோடி ரூபாய் முதலீடு உள்ள ஆண்டுக் கடன் திட்டத்தை வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். இந்த ஆண்டு கடன் திட்டத்தில் வேளாண்மைத் துறைக்கு ரூபாய் 1,48,859 கோடி, குறு, சிறு தொழில்களுக்கு 92,075 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. 2020-21ஆம் ஆண்டு தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஒரு உத்வேகம் வழங்குமென்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. மூன்று முக்கியமான துறைகளைப் பற்றி இன்றைய தினம் நான் விவாதிக்க உள்ளேன்.

சிறப்பு முகாம் நடத்துங்கள்
மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பு இருக்கின்றதால், டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி முழுவீச்சில் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு வேளாண் உற்பத்தி மிகவும் இன்றியமையாதது என்பதை கருத்தில் கொண்டு, விவசாயத்திற்கான கடன் உதவியை வங்கிகள் உடனுக்குடன் வழங்கி, விவசாயிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நான் உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் இது வரை 20 லட்சத்து 20 ஆயிரம் உழவர் கடன் அட்டைகள் விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கடன் அட்டைகளின் மூலம் விவசாயிகள் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை விதைகள், உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் வாங்க, வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் / வங்கிகள் மூலமாக கடன் வழங்கப்படுகிறது. நீங்கள் அனைவரும் உங்கள் பகுதிகளில் சிறப்பு முகாம்களை நடத்தி, இந்த உழவர் கடன் அட்டைகளை அனைத்து விவசாயிகளுக்கும் தாராளமாக வழங்க வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கடன் வழங்க வேண்டும்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (msme) பல்வேறு புதிய திட்டங்களை சமீபத்தில் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 50 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களில் சுமார் ஒரு கோடி மக்கள் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் msme தொழில் துறையின் பங்கு ஏறத்தாழ 30 சதவீதமாகும். அரசின் சிறப்பு
சலுகை திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம் அனைவரின் கடமையாகும். மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 3 லட்சம் கோடி ரூபாய் கூடுதல்
நிதி உதவி அதிகளவில் நம்முடைய மாநிலத்திற்கு கிடைக்க நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடனாக வழங்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கடன் உதவியை உயர்த்துதல்
சிறு, குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. 2018-19ஆம் ஆண்டு 8,923 கோடி ரூபாய் அளவிற்கு புதிய கடனுதவி இத்துறைக்கு அளிக்கப்பட்டது. இத்துறைக்கு அளிக்கப்படும் கடனுதவியின் வருடாந்திர வளர்ச்சி 4 சதவீதம் என்ற மிக குறைவான அளவிலேயே உள்ளது. இந்த சதவீதத்தை பெரிய அளவில் உயர்த்திட வேண்டும் என்று உங்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசின் குறு, சிறு நிறுவனங்கள் கடன் உத்தரவாத நிதியத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் கடனுதவி 2017-18ல் 1,784 கோடி ரூபாயிலிருந்து 2018-19ல் 2,543 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தை போக்குவதற்காக இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடனுதவி மேலும்
அதிகரிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

புதிதாக தொழில்களுக்கு
தமிழ்நாட்டில் ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், ஊரகப் பகுதி மக்களின் வருமானத்தைப் பெருக்கவும், உலக வங்கி உதவியுடன் ஊரக புத்தாக்கத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், புதிதாக தொழில்களை தொடங்கவும் 300 கோடி ரூபாய் கொரோனா சிறப்பு நிதியுதவித் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை 28.5.2020 அன்று நான் துவக்கி வைத்துள்ளேன். தமிழ்நாட்டில் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்திடவும், வறுமையைப் போக்கவும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
அக்குழுக்கள் சிறப்பாக செயல்பட தமிழக அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி, அம்மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பாதுகாத்து வருகிறது. அந்த வகையில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு 2019-20ஆம் ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 13,301 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. 2020-21ஆம் ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய் கடனுதவி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் உப இலக்காக ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 5,500 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குறியீடுகளை வருகின்ற 2021 ஜனவரி மாதத்திற்குள் எய்தி சாதனை படைத்திட வேண்டும் என வங்கிகளை நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
பிணையம் இல்லா கடன்
ஊரகப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களை குறு நிறுவனங்களாக உருவாக்கிட, பிணையில்லா கடன் உத்தரவாத நிதித் திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் 20 லட்சம் ரூபாய் வரை பிணையம் இல்லாக் கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்களை பெருமளவில் தேர்வு செய்து அவர்களுக்கு கடன் உதவி வழங்கி தொழில் தொடங்கவும், வாழ்வாதாரம் மேம்பாடு அடையவும் நீங்கள் அனைவரும் உதவி புரிய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் 35 இலட்சம் நபர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கான கூலித்தொகையை வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று வாங்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. தற்பொழுது, கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்றதால் ஏழை மக்கள் அங்கு சென்று கூலித் தொகையை வாங்குவது கடினமாக இருக்கிறது.
கொரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணியில் நாம் ஈடுபட்டுள்ள இந்தக் காலக்கட்டத்தில் (மூன்று மாத காலத்திற்கு மட்டும்), இந்த நோய் குறைகின்ற வரை அவர்கள் இந்தத் தொழில் புரிகின்ற இடங்களுக்கு வங்கிகளின் அதிகாரிகளே சென்று கூலித் தொகையை அவர்களிடம் நேரடியாக வழங்கினால் சரியாக இருக்கும். பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் கடனுதவி அளித்து வரும் அனைத்து வங்கியாளர்களுக்கும் நான் எனது நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications