"பாவத்தை அனுபவிப்பீர்கள்.." சட்டசபையில் சீறிய எடப்பாடி! "உங்களுக்கு ஆட்சி போச்சே.." ஸ்டாலின் பதிலடி
சென்னை: கடந்த காலங்களில் கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்ட திட்டங்களை நிறுத்தியதால்தான் அதிமுக ஆட்சியை இழந்து இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கடுமையான பதிலடியை கொடுத்தார்.
2022ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று ஆளுநர் ஆர். என். ரவி உரையுடன் தொடங்கியது. கொரோனா பரவலால் தலைமைச் செயலகத்தில் நடத்தாமல் இந்த முறையும் கலைவாணர் அரங்கிலேயே கூட்டம் நடைபெற்றது.
2 நாட்கள் சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும் என அறிவிக்கப்பட்டதால் இன்றும் கூட்டத் தொடர் நடைபெற்றது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அம்மா இரு சக்கர வாகன மானியம் கிடைக்காமல் இருப்போர், அம்மா உணவகத்தில் நடக்கும் பணியாளர்கள் குறைப்பு, அம்மா மினி கிளீனிக்குகள் மூடல் குறித்த விவகாரங்களை பேரவையில் எழுப்பினார்.

இரு சக்கர வாகனம் மானியம்
அப்போது அவர் கூறுகையில் கடந்த அதிமுக ஆட்சியில் இரு சக்கர வாகனம் வாங்கியவர்களுக்கு இன்னமும் மானியம் போய் சேரவில்லை. அதற்கான ஏற்பாடுகளை இந்த அரசு செய்ய வேண்டும். அம்மா உணவகத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. இது கண்டனத்துக்குரியது என்றார்.

கருணாநிதி பெயரில் திட்டங்கள்
அப்போது குறுக்கிட்ட அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன், அம்மா உணவகத்தை மூடினால்தான் என்ன? நீங்கள் கருணாநிதி பெயரிலான எத்தனை திட்டங்களை மூடினீர்கள்? என கேள்வி எழுப்பினார். அப்போது கொந்தளித்த எடப்பாடி பழனிச்சாமி, அம்மா உணவகத்தை மூடினால் அதற்கான பாவத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்றார்.

முதல்வர் ஆவேசம்
இதையடுத்து ஆவேசமடைந்த முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மூடியதால்தான் நீங்கள் ஆட்சியை இழந்தீர்கள் என்றார். இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அம்மா கிளினிக்குகள் அனைத்தும் மூடப்படும் என்ற அதிர்ச்சி தகவலை கூறினார்.

மருத்துவர்கள்
மேலும் அவர் கூறுகையில் ஒரு ஆண்டுக்கு தற்காலிகமாக அம்மா மினி கிளினீக் தொடங்கப்பட்டு வெறும் 1,800 மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். செவிலியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அம்மா மினி கிளினீக் திட்டம் முடிந்து விட்டது என்றார்.












Click it and Unblock the Notifications