சமூக போராளி இளைய பெருமாள்..சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம்..சட்டசபையில் முதல்வர் புகழாரம்
சென்னை: சிதம்பரத்தில் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இளையபெருமாள் முயற்சியால்தான் சிதம்பரத்தில் இரட்டைப் பானை முறையில் முடிவுக்கு வந்தது. மிக பெரிய சமூக போராட்டங்களை நடத்தியவர் எல்.இளையபெருமாள் என்றும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்குடியைச் சேர்ந்தவர் இளையபெருமாள். தாழ்த்தப்பட்ட மக்களின்முக்கியத் தலைவராக விளங்கியவர். 3 முறை எம்.பியாக இருந்தவர். ஒரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

கடந்த 1969ம் ஆண்டு தலித் மக்களின் சமூக, பொருளாதார நிலை குறித்த ஆய்வறிக்கையை இளையபெருமாள் தலைமையிலான கமிட்டி மத்திய அரசிடம் அளித்தது. ஆனால் அந்த பரிந்துரைகளை ஏற்க காங்கிரஸ் அரசு மறுத்து விட்டது. இதையடுத்துகாங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் இளையபெருமாள். பின்னர் கடந்த 2003ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
பெரியவர் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு விழா குறித்து 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார். அப்போது பேசிய அவர், இளையபெருமாள் முயற்சியால்தான் சிதம்பரத்தில் இரட்டைப் பானை முறையில் முடிவுக்கு வந்தது. மிக பெரிய சமூக போராட்டங்களை நடத்தியவர் எல்.இளையபெருமாள். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இளம்வயதில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று கூறினார்.

பட்டியலின மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர். தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை இளையபெருமாள் பட்டியல் போட்டு சொன்னதை கேட்டு அண்ணல் அவர்களே வியப்படைந்தார். வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு அடித்தளமே பெரியவர் இளைபெருமாளின் அறிக்கைதான்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது செல்லும் என்று இளையபெருமாள் அறிக்கையை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் ஒளிவிளக்காக மட்டுமல்ல; நெறிசார்ந்த அரசியலின் அடையாளமாகவும் விளங்கிய அய்யா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டைப் போற்றும் வகையில் விதி 110-ன்கீழ் அறிவிப்பு ஒன்றை இம்மாமன்றத்தில் அறிவிப்பதை என்னுடைய கடமையாக நான் கருதுகிறேன்.
சமூக சீர்திருத்தத்தின் பெருமைமிகு தலைவர்களான அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், எல்.சி.குருசாமி, சுவாமி சகஜானந்தர் ஆகியோர் வரிசையில் கம்பீரமாக நின்று போராடியவர்களில் ஒருவர்தான் பெரியவர் எல். இளையபெருமாள் அவர்கள். அத்தகைய சமூகப் போராளியைப் போற்றுவதை திராவிட மாடல் அரசு தனது கடமையாகக் கருதுகிறது.
சமூக இழிவு களையப்பட வேண்டும்; சாதிய வன்முறை ஒடுக்கப்பட வேண்டும்; அனைத்து சமூகங்களின் ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும்; சமத்துவ, சுயமரியாதைச் சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துக்காக உழைத்த பெரியவர் இளையபெருமாள் அவர்களின் தொண்டை சிறப்பிக்கும் வகையில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் ஒன்று அமைக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications