சிறுத்தை தாக்கி சிறுமி உட்பட 2 பேர் பலி.. தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
சென்னை: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா 10 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் மேங்கோ ரேன்ஜ் எஸ்டேட்டில் பணிபுரியவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவசங்கர் கர்வா. இவரது மகள் நான்சி (3) அப்பகுதியில் உள்ள அங்கன்வாடிக்குச் சென்றுவிட்டு தனது தாயுடன் வந்து கொண்டிருந்த பொழுது காட்டுப் பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை குழந்தை நான்சியை தூக்கிச் சென்று தாக்கியது. இதில் படுகாயமடைந்த சிறுமி உயிரிழந்தார்.

இதே போல கடந்த மாதம் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பெண்களை சிறுத்தை தாக்கியது. இதில் படுகாயமடைந்த சரிதா என்ற பெண்மணி உயிரிழந்தார். சிறுத்தை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்ததோடு, மேலும் 3 பேர் காயமடைந்த நீலகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர். இந்நிலையில், சிறுத்தை தாக்குதலால் பலியானோர் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.கஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீலகிரி மாவட்டம், ஏலமன்னா கிராமம், மேங்கோ ரேன்ஜ் அஞ்சல். பகுதியைச் சேர்ந்த திருமதி. சரிதா (வயது 29) க/பெ. பிரசாந்த் என்பவர் கடந்த 29.12.2023-ம் தேதி அன்றும், மேங்கோ ரேன்ஜ் ஞ்சல், எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி நான்சி (வயது 3) தபெ.சிவ்சங்கர் என்பவர் கடந்த 06.01.2024 அன்றும் சிறுத்தை தாக்கியதன் காரணமாக உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
விலை மதிப்பில்லாத இந்த இரு உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின். குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா 10 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications