கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் : முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த நபர்களுக்கு வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற உடல் உபாதைகள் காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கள்ளச் சாராயத்தை அருந்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், மேல் சிகிச்சைக்காக பலரையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும், சேலம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். சேலம் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருந்தும் சிறப்பு மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 90 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புகள் அதிகமாகி வருவது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக நேற்று கோவிந்தராஜ், தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது விஜயா என்கிற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் உடனடியாக நியமனம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்னர்.
மேலும் இந்த வழக்கு குறித்து தீர விசாரிக்கவும், உரிய மேல் நடவடிக்கை எடுக்கவும் வசதியாக இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடனடியாக இன்று காலையே சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். சட்டப் பேரவையின் இன்றைய அலுவல்கள் முடிந்தவுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தினார். மூத்த அமைச்சர்கள், டிஜிபி, உளவுத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.











Click it and Unblock the Notifications