உலகளவில் சாதித்த சென்னை ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்கள்.. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
சென்னை: அமெரிக்காவில் நாசா சார்பில் நடந்த போட்டியில் 167 நாடுகளை சேர்ந்த 18,860 அணிகள் பங்கேற்றதில் நம் நாட்டின் ஒரே அணியாக சென்னை ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்களின் குழு வெற்றி பெற்று அசத்தியது. இதையடுத்து மாணவர் குழுவை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.
சென்னை ராமாபுரத்தில் ஈஸ்வரி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ‛ஃபோட்டானிக்ஸ் ஒடிஸி' என்ற பெயரில் மாணவர்களின் குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் உள்ள மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் தான் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நாசா விண்வெளி மையம் சார்பில் உலகளாவிய போட்டி அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியின் ‛ஃபோட்டானிக்ஸ் ஒடிஸி' குழுவை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் மொத்தம் 167 நாடுகளை சேர்ந்த 18,860 அணிகள் பங்கேற்றன. தொலைதூரம் மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு அதிவேக இண்டர்நெட் சேவையை விரிவுப்படுத்தும் நோக்கில் மாணவர்கள் செயற்கைகோள் அடிப்படையிலான இணைய உள்கட்டமைப்பு மாதிரியை உருவாக்கி காட்சிப்படுத்தினர்.
இந்த திட்டம் புதுமையாகவும், சாத்தியப்படுத்தும் வகையில் நல்ல தொழில்நுட்பத்துடன் இருந்தது. இதனை பாராட்டி NASA சார்பில் International space apps challenge 2025 Global winner - Most Inspiration Award விருது வழங்கப்பட்டது. முதல் 10 உலக வெற்றியாளர்களின் ஒன்றாக ‛ஃபோட்டானிக்ஸ் ஒடிஸி’ மாணவர் குழு சாதித்து காட்டியது.
அதுமட்டுமின்றி இந்த விருது பெற்ற தமிழ்நாடு மற்றும் இந்தியாவை சேர்ந்த ஒரே மாணவர் குழு என்ற பெருமையை ’ஃபோட்டோனிக்ஸ் ஒடிஸி’ பெற்றது. இதையடுத்து இன்று முதல்வர் ஸ்டாலின் மாணவர் குழுவை வாழ்த்தினார்.
சென்னை ஈஸ்வரி பொறியியல் கல்லூரி தலைவர் டாக்டர் ஆர் சிவகுமார், இணை தலைவர் எஸ் நிரஞ்சன், கல்லூரி முதல்வர் டாக்டர் பி தெய்வசுந்தரி மற்றும் விருது பெற்ற ‛ஃபோட்டானிக்ஸ் ஒடிஸி’ மாணவர் குழுவினர் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.












Click it and Unblock the Notifications