கச்சத்தீவு விவகாரத்தில் 10 ஆண்டாக கும்பகர்ண தூக்கம்.. மோடியிடம் 3 கேள்வி கேட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை: 10 ஆண்டுகளாக கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்து விட்டு தேர்தலுக்காக மீனவர்கள் மீது திடீர் பாசத்தை ஏற்படுத்தும் பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் முதல்வர் ஸ்டாலின் 3 கேள்விகளை கேட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.
1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?
2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?
3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?
திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே...
#பதில்_சொல்லுங்க_மோடி
கச்சத்தீவு விவகாரம் திடீரென லோக்சபா தேர்தல் களத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. கச்சத்தீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விவரங்களை பெற்றுள்ளார். இதை வைத்துக் கொண்டு பிரதமர் மோடி உள்ளிட்டோர் திமுக, காங்கிரஸை விமர்சித்து வருகிறார்கள்.
இந்த கச்சத்தீவு விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன். கச்சத்தீவு பிரச்சினை எப்படி உருவானது என்பது மக்களுக்கு தெரியவேண்டும்.
1974ஆம் ஆண்டு கடல் எல்லையை எங்கே வைப்பது என்று இந்தியா- இலங்கை இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது வரையப்பட்ட எல்லையின்படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. கச்சத்தீவை விட்டுக் கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை என ஜவஹர்லால் நேரு தெரிவித்திருந்தார்.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளில் 6,180 மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் நடவடிக்கையால்தான் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடியை தந்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், இலங்கையுடனான நட்புறவுக்காக 1974இல் கச்சத்தீவு வழங்கப்பட்டது. பிரதமர் மோடியும் கூட, வங்கதேசத்துடன் எல்லைகளைப் பரிமாற்றம் செய்துதான் இருக்கிறார், 10 ஆண்டுகளில் இப்போது திடீரென எல்லை பிரச்சினை, இந்திய நிலப்பகுதி பற்றி எல்லாம் மோடி விழித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவு மீட்பு நடவடிக்கைகாக, கச்சத்தீவு சிக்கலுக்குத் தீர்வு காண மத்தியில் ஆளும் பாஜகவும் பிரதமர் மோடியும் என்னதான் செய்தார்கள்? என கார்கே கேள்விகளை எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications