அஜித் குமார் லாக்-அப் மரணம்.. நியாயப்படுத்த முடியாத தவறு இது.. குடும்பத்தினருக்கு ஸ்டாலின் ஆறுதல்!
சென்னை: திருப்புவனம் இளைஞர் அஜித் குமாருக்கு நடந்த கொடுமை யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் அஜித் குமார் குடும்பத்தினரிடம் செல்ஃபோன் மூலமாக வருத்தம் தெரிவித்து ஆறுதல் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமார் திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல்துறையினரால் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதிகள் கருத்து
இதுதொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மாநிலமே தனது குடிமகனை கொலை செய்துவிட்டது என்று கருத்து தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அவரின் உடலில் 44 காயங்கள் இருந்திருக்கின்றன. உடலின் அத்தனை இடங்களிலும் காயம் உள்ளது. அவர் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது.
நீதிபதி விசாரணை
இது சாதாரண கொலை வழக்கு இல்லை. மரக்கட்டை, இரும்பு கொண்டு தாக்கப்பட்டுள்ளார். அதிகாரமே இத்தகைய மனநிலையை காவல்துறையினருக்கு தந்திருக்கிறது. இந்த தாக்குதல் நிகழ்வை இயக்கியது யார்? அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது. அதேபோல் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டு ஜூலை 8ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பெரிய கருப்பன் ஆறுதல்
இந்த நிலையில் அமைச்சர் பெரிய கருப்பன் திருப்புவனத்தில் உள்ள இளைஞர் அஜித் குமாரின் வீட்டிற்கு நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்தார். அவருடன் ஆட்சியர் பொற்கொடி உள்ளிட்டோர் உடன் சென்றனர். அப்போது அமைச்சர் பெரியகருப்பன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, உடனடியாக கிடைக்க கூடிய நிவாரண உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார்.
செல்போனில் முதல்வர் ஆறுதல்
தொடர்ந்து அமைச்சர் பெரிய கருப்பனை செல்ஃபோன் மூலமாக அழைத்த முதல்வர் ஸ்டாலின், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின், நடக்கக் கூடாது நடந்துவிட்டது. நிச்சயமாக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருத்தம் தெரிவித்தார். அதேபோல் அஜித் குமாரின் சகோதரருக்கு நிரந்தர வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் உறுதி கூறினார்.
முக ஸ்டாலின் பதிவு
பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில், திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு! கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும் என்று பதிவிட்டுள்ளார்.
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு!
— M.K.Stalin (@mkstalin) July 1, 2025
கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்! pic.twitter.com/YhECfZx6v9












Click it and Unblock the Notifications