நிதி ஆயோக்கில் மம்தா பானர்ஜியை இப்படித்தான் நடத்துவதா? நாங்கள் எதிரிகளா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
சென்னை: ஒரு மாநில முதல்வரான மம்தா பானர்ஜியை, நிதி ஆயோக் கூட்டத்தில் இப்படித்தான் நடத்துவதா என மத்திய பாஜக அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் தான் 5 நிமிடங்கள் பேசியதும் மைக் அணைக்கப்பட்டதால் அங்கிருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாதியில் வெளியேறிய நிலையில் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இதுதான் கூட்டாட்சி தத்துவமா? மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்கி அவர்களை எதிரிகளை போல் நடத்தக் கூடாது. கூட்டாட்சி தத்துவத்தில் அனைவரது கருத்துகளுக்கும் உரையாடல்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளிலேயே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டுமே கலந்து கொண்டார். அப்போது அவருக்கு 5 நிமிடங்களுக்கு மேல் பேச வாய்ப்பு தரவில்லை என கூறி அந்த கூட்டத்திலிருந்து வெளியேறி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு எந்த மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என கூறி தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்வர்களும் டெல்லி, புதுவை ஆகிய இரு யூனியன் பிரதேசங்களும் இன்று டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
நிதி ஆயோக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. இதில் அனைத்து மாநில முதல்வர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்ட நிலையிலும் சில மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும் எதிர்க்கட்சிகளின் சார்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
அவர் நிதி ஆயோக் கூட்டம் முடிவதற்கு முன்பாக பாதியிலேயே வெளியேறிவிட்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், நிதி ஆயோக் கூட்டத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டியது. இதனால் நான் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்துவிட்டேன்.
பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் மற்றும் பாஜக கூட்டணியினர் ஆளும் மாநில முதல்வர்களும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினார்கள். சந்திரபாபு நாயுடு 20 நிமிடங்களை வரை பேசினார், அது போல் அஸ்ஸாம், கோவா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் 10 முதல் 12 நிமிடங்கள் வரை பேசினர். அவர்களுக்கு வாய்ப்பளித்த மத்திய அரசு எனக்கு தரவே இல்லை.
எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதல்வர்களில் நான் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றேன். ஆனாலும் எனக்கு பாரபட்சம் காட்டப்பட்டது. வெறும் 5 நிமிடங்கள் மட்டும் எனக்கு பேச வாய்ப்பளித்தனர். 5 நிமிடங்களுக்கு மேல் பேசிய போது என் இருக்கை அருகே இருந்த மைக்கை ஆஃப் செய்துவிட்டனர்.
பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், கூட்டணியில் உள்ள முதல்வர்களுக்கு மட்டும் அதிக வாய்ப்புகளை வழங்கிவிட்டு என்னை புறக்கணித்திருக்க கூடாது. இது மேற்கு வங்க மாநிலம் மட்டுமின்றி அனைத்து மாநில கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும். இது நியாயமற்றது என்றேன். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications