சாகித்ய அகாடமியின் விருதுகளை வென்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
சென்னை: சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர்கள் உதயசங்கர், ராம் தங்கத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழில் எழுத்தாளர் உதய சங்கருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று யுவ புரஸ்கார் விருது ராம் தங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதனின் பொம்மை என்ற நூலை எழுதிய எழுத்தாளர் உதய சங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கீழடி ஆய்வை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆதனின் பொம்மை என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
திருக்கார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்பை எழுதிய எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு சாகித்ய அகாடமி வழங்கும் இளம் எழுத்தாளர்களுக்கான யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர்கள் உதயசங்கர், ராம் தங்கம் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பாராட்டிள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ஆதனின் பொம்மை-யை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கும்; இளமையில் பசி எனும் வலியை நாஞ்சில் நாட்டு மொழியில் மிக அழுத்தமான விவரிப்புகளால் பதிவு செய்த திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்காக யுவ புரஸ்கார் விருது பெற்றுள்ள ராம் தங்கம் அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் எனது மனமார்ந்த பாராட்டுகள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications