சர்ச்சையில் ஸ்டாலின்.. முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் நடந்ததை கவனிச்சீங்களா.. பரவும் வீடியோ
சென்னை: பசும்பொன் முத்துராமலிங் தேவரின் குருபூஜையொட்டி முதல்வர் ஸ்டாலின் நேற்று பசும்பொன் செய்து அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில் தற்போது சர்ச்சை உருவாகி உள்ளது. அதற்கு அருகே நின்ற திமுக எம்எல்ஏ காதர்பாஷா முத்துராமலிங்கம் செய்த செயல் தான் காரணம்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் அமைந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரரான இவர் பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களை எதிர்த்து போராடினார்.

குறிப்பாக சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையை அனுப்பி வைத்தவர் தான் முத்துராமலிங் தேவர். அதேபோல் எம்பி, எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார்.
முத்துராமலிங்க தேவரின் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி நடத்தப்பட்டு வருகிறது. நேற்றும் குருபூஜை நடந்தது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில் நேற்று முத்து ராமலிங் தேவரின் 117வது பிறந்த நாள் மற்றும் 62-வது குருபூஜை நடந்தது.

இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்களான முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலர் பசும்பொன்னுக்கு நேரில் சென்று முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதற்கிடையே தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோ என்பது முதல்வர் ஸ்டாலின் தொடர்பானது. வீடியோவில் நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் பசும்பொன்னில் முத்துராமலிங் தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் காட்சிகள் உள்ளன. இதில் சர்ச்சை என்னவென்றால் அவர் திருநீறு பூசாமல் போனது தான் என்று குறிப்பிட்டு வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அதாவது முதல்வர் ஸ்டாலின், முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் சென்று மாலை அணிவிக்கிறார். அதன்பிறகு மலர்தூவி மரியாதை செய்கிறார். இந்த வேளையில் ஸ்டாலின் அருகே தாம்பூலத்தில் திருநீறு மற்றும் கற்பூரம் இருந்தது. இந்த தாம்பூலத்தை ஸ்டாலின் அருகே நின்ற ராமநாதபுரம் எம்எல்ஏ கதார்பாஷா முத்துராமலிங்க அப்படியே சிறிது நகர்த்தி வைக்கிறார்.
மேலும் ஸ்டாலின் திருநீர் எதுவும் பூசவில்லை. அதேபோல் அங்கிருந்தவர் திருநீர் பூசுவதற்கான தாம்பூலத்தை நீட்டவும் இல்லை. மாறாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், சீமான் உள்ளிட்டவர்கள் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செய்தபிறகு அங்குள்ள பூசாரி வழங்கிய ஆரத்தி தட்டில் இருந்து திருநீறை எடுத்து நெற்றியில் பூசினர். இந்த காட்சிகளை ஒப்பிட்டு முதல்வர் ஸ்டாலினை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் திருநீறு பூசவில்லை என்று இதற்கு முன்பும் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications