“அத்தனை பேர் டெபாசிட்டும் காலி.. பெரியார் மண்ணில் பெருவெற்றி”.. பெருமை பொங்க சொன்ன முதல்வர் ஸ்டாலின்
சென்னை: "பெரியார் மண்ணில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம்" என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆவடியில் நடைபெற்று வரும் திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி குறித்துப் பேசியுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று ஆவடியில் நடைபெற்ற திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டின் உரிமையை காக்க ஒன்று கூடியுள்ளோம். தமிழ்நாடு முழுக்க திமுக கொடி கம்பீரமாக பறக்கிறது. உங்களின் ஆதரவால், உழைப்பால் உருவானதுதான் திராவிட மாடல் ஆட்சி.
பெரியார் மண்ணில் பெருவெற்றி பெற்றுள்ளோம். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். ஈரோட்டில் கழகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனை பேரும் டெபாசிட் இழந்துள்ளனர்.” எனப் பேசினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “மத்திய பட்ஜெட்டில் பீகார் பீகார் என பல முறை சொல்லி இருக்கிறார்கள். பீகாருக்கு தேர்தல் வருவதால் அதன் பெயரைச் சொல்கிறார்கள். கடந்த முறை பட்ஜெட்டில் ஆந்திரா.. ஆந்திரா எனச் சொன்னார்கள்.. இந்த முறை பீகார்.. பீகார்.. எனக் கூறுகிறார்கள். ஆந்திராவிற்கோ, பீகாருக்கோ திட்டங்களை ஒதுக்க வேண்டாம் எனக் கூறவில்லை. தமிழ்நாட்டை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
தமிழ்நாட்டுக்கு புதிய சிறப்புத் திட்டங்கள் இல்லை, தமிழ்நாட்டுக்கு ரயில் திட்டங்கள் இல்லை, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லை, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை. எதை எடுத்தாலும் இல்லை இல்லை இல்லை மட்டும் தான். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறளை மேற்கோள் காட்டினால் மட்டும் போதுமா?” எனப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications