6 ஆண்டுக்கால போராட்டம்.. குட்நியூஸ் சொன்ன ஸ்டாலின்- ஒரே மாதத்தில் மாறிய வாழ்க்கை
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வசிப்பவர் இலங்கேஸ்வரன். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்திலிருந்தே தனக்கு ஒரு இணைப்பு இருசக்கர வாகனம் கேட்டு மனு மேல் மனு போட்டுக்கொண்டிருந்தார். இவரது மனுக்கள் மாறிமாறி போய்ச் சேர்ந்ததே ஒழிய, வாகனம் வந்துசேரவே இல்லை.
திமுக ஆட்சிக்கு வந்த உடன் இவர் மீண்டும் மனு அளித்துள்ளார். அவருக்கு ஒரே மாதத்தில் வாகனம் எந்த செலவும் இல்லாமல் வீடு வந்துசேர்ந்திருக்கிறது. அதிலும் சிறப்பு என்னவென்றால், உலக மாற்றுத்திறனாளிகளின் நாளான டிசம்பர் 3 ஆம் தேதி இவருக்கு வாகனம் கிடைத்துள்ளது. ஆகப் பெரிய மகிழ்ச்சியில் மிதக்கும் அவரை சந்தித்தோம்.

இலங்கேஸ்வரன் முசாபுரி பகுதியில் வசித்துவருகிறார். மேலூர் எஸ்டேட்டில் இப்போது வேலை பார்க்கிறார். இங்கிருந்து கொலகொம்பை வரை நடந்தே சென்றால், குன்னூர் செல்ல பேருந்து கிடைக்கும். இவரது ஊரான முசாபுரி பகுதிக்கும் பேருந்து இல்லை. இவருக்குப் பேருந்தில் ஏறி இறங்குவதிலும் பல கஷ்டங்கள் இருந்துள்ளன. ஆகவே அதிக இன்னல்களைச் சந்தித்து வந்துள்ளார்.
இப்போது அத்தனை கஷ்டங்களையும் உடைத்து எறிந்துவிட்டு, வாழ்வில் புதிய மனிதனாகப் பிறந்துள்ளார் இலங்கேஸ்வரன். இந்த மாற்றம் குறித்து அவர் என்ன சொல்கிறார்?

"முன்பு குன்னூரில் ஒரு மொத்த வியாபாரக் கடையில் பேக்கிங் செய்யும் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது ஒரு எஸ்டேட்டில் வாட்ச் மேனாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். 4 வருடங்களா உதவிக் கேட்டு நிறைய மனுக்களைப் போட்டுக் கொண்டிருந்தேன்.
ஆனால், ஒரு பதிலும் கிடைக்கவில்லை. வீட்டிலிருந்து எஸ்டேட்டுக்கு பேருந்தில்தான் வருவேன். ஒரு நேரம் பஸ் சரியான நேரத்திற்கு வந்துவிடும். சிலநேரங்களில் பஸ் வரத் தாமதமாகும். வாட்ச் மேன் என்பதால் சரியான நேரத்திற்குப் பணிக்கு வரவேண்டும்.

இரவு கொஞ்சம் தாமதமாகிவிட்டால், பஸ் இல்லாத நேரங்களில் நடந்தேதான் வீட்டுக்குப் போகவேண்டும். அது பெரிய சிரமம். ஆகவேதான் இருசக்கர வண்டிக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என உதவிக் கேட்டேன். ஆனால் போன அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை.
என்னுடைய வருமானத்தை வைத்து வண்டி வாங்குவது முடியாத காரியம். வீட்டுத் தேவைக்கே என் வருமானம் பற்றாது. ஆகவே முதலமைச்சராக ஸ்டாலின் அய்யா வந்ததும் மனுக் கொடுத்தேன். உடனே வந்து விசாரித்தார்கள்.

இப்போது எனக்கு டிவிஎஸ் பெப் வண்டி வாங்கிக் கொடுத்திருக்கிறார். தினமும் அதில்தான் வருகிறேன். நிறையவே எளிதாக இருக்கிறது. இவ்வளவு நாள்கள் நான் பட்ட கஷ்டங்கள் காணாமல் போய்விட்டன. இந்த வண்டியில் வரும்போதுதான் தினம் தினம் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு, பயணம் செய்துள்ளேன் என்பது புரிகிறது.
முன்பு எல்லாம் வேலைக்குப் போக வெளியே வருவதே பெரிய கஷ்டமாக இருக்கும். அதற்காகவே வெளியே எங்கேயும் வர மாட்டேன். ஒரு நிகழ்ச்சி, வீட்டு உறவினர் விசேஷம் என எங்கேயும் போகமாட்டேன். காரணம், நடப்பதுதான். என்னால் கம்பை வைத்துக் கொண்டு நடக்க முடியவில்லை. முன்பைப் போல இல்லை. வயதாகிவிட்டது. கம்பை ஊன்றி ஊன்றிக் கை வலியும் அதிகமாகிவிட்டது.

மொத்தத்தில் பெரிய அளவில் வாழ்க்கையில் சோர்வு வந்துவிட்டது. இந்த வண்டியை ஸ்டாலின் அய்யா வாங்கி கொடுத்த பிறகு என் வாழ்க்கையே பெரிய அளவில் மாறிவிட்டது" என்கிறார்.
இவர் வசிப்பது மலைப்பகுதி என்பதால், நேராகச் சாலைவழியே பயணிப்பது கடினம். எங்கெல்லாம் குறுக்குப் பாதைகள் கிடைக்கிறதே அப்படியான வழிகளில் பயணித்தால் தூரத்தின் அளவை கொஞ்சமாவது குறைக்க முடியும். ஆகவே இலங்கேஸ்வரனும் தனது வீட்டிலிருந்து கிடைக்கும் பாதையில் போய் திரும்பிக் கொண்டிருந்தார்.

மலைப்பாதை என்பது ஏற்றம் இறக்கமாக இருக்கும். அதில் ஒரு மாற்றுத்திறனாளியாகக் கம்பை வைத்து நடந்து செல்வது சிரமமான காரியம். அத்துடன், மலைப்பாதைகளில் காட்டு எருமைகள் தொந்தரவும் அதிகமாக இருக்கும். அதைச் சமாளித்துப் பயணிப்பதுதான் சவாலான காரியம் என்கிறார் இலங்கேஸ்வரன்.
"பல வருஷமாகப் போராடி வருகிறார். இந்த முறை சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரனிடம் மனு அளித்திருந்தார். அவர் மூலமாகத்தான் முதலமைச்சர் அய்யா ஸ்டாலின் பார்வைக்குப் போனது. உடனே ஒரே மாதத்தில் விசாரித்து வண்டியை வாங்கிக் கொடுத்துவிட்டார்கள்.
எங்கள் தேயிலை பண்ணை உள்ள பகுதிக்குப் பேருந்து வசதி கிடையாது. எங்காவது போகவேண்டும் என்றால், அந்த நேரத்தைக் கணக்கிட்டு, ஒரு மணிநேரம் முன்பே புறப்பட வேண்டும். எங்களுக்கே இப்படி என்றால், அவரோ நடக்க முடியாதவர். அவர் 2 மணிநேரத்திற்கு முன்னதாகவே புறப்பட வேண்டும்.

சிறுவயது முதல் இலங்கேஸ்வரனைத் தெரியும். பிறவியிலேயே மாற்றுத்திறனாளி அவர். இந்த வண்டி வந்தபிறகுதான் அவர் முகத்திலேயே மகிழ்ச்சியைப் பார்க்கிறேன். அந்தளவுக்குக் கஷ்டங்களைக் கடந்துவந்துள்ளார். இப்போது நேரத்திற்கு எஸ்டேட் வேலைக்கும் வருகிறார்" என்கிறார் இவருடன் பணிசெய்யும் சக தொழிலாளி.
இவர் எஸ்டேட்டில் இருந்து மானார் 3கிமீட்டர் தொலைவில் உள்ளது. பால்மரா லீஸ் 4 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அலுவலகத்தில் திறன் உதவியாளராக வேலை செய்துவரும் விஜயன் இது குறித்துப் பேசுகையில், "நான் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் வாகனங்களைப் பெற்றுத்தரும் பிரிவில் பணி செய்து வருகிறேன். இலங்கேஸ்வரன் 2016இல் இருந்து தொடர்ந்து பலமுறை மனு கொடுத்துள்ளார்.
ஆனால், அரசு விதி எப்படி உள்ளது என்றால், இரண்டு கால்கள் பாதித்த, இரண்டு கைகள் செயல்படாத மாற்றுத்திறனாளிகளுக்குத்தான் பெட்ரோல் இருசக்கர வாகனம் தர அனுமதிக்கிறது. இவரே ஒரு கால் மட்டுமே பாதித்தவர். அதனால் இவருக்கு உரியமுறையில் உதவி கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் மனம் தளராமல் நடையாக நடந்து கொண்டிருந்தார்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, ஒரு கால் பாதித்த மாற்றுத்திறனாளிக்கும் பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனத்தை வழங்கலாம் என விதியை மாற்றினார்கள். அதுவும் சட்டமன்ற உறுப்பினரின் நிதியிலிருந்தே வழங்கலாம் என்று அரசாணை வெளியிட்டார்கள். அதன்பிறகுதான் இவருக்கு வாகனம் கிடைத்துள்ளது.
இப்போது இவர் நீலகிரியில் உள்ள கிரெய்க்மோர் குரூப் தேயிலை எஸ்டேட்டில் வேலை பார்க்கிறார். இது நீலகிரி குல்லகம்பி போஸ்ட் என்ற இடத்தில் உள்ளது. இங்கிருந்து குன்னூர் செல்ல பேருந்து வசதி இல்லை.
அதனால் அங்குப் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு, இப்போது வாட்ச் மேனாக இங்கே வேலை பார்க்கிறார். இவருக்கு வண்டி கிடைத்தது விட்டது. எல்லை இல்லாத சந்தோஷத்தில் இருக்கிறார். அவரது மகிழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அரசாணைதான் காரணம்.
வண்டி கொடுத்த பின்னர் வனத்துறை அமைச்சருக்கும் முதல்வருக்கும் கோடான கோடி நன்றி சொன்னார்." என்கிறார்
மேலூர் ஊராட்சி 12வது வார்டு உறுப்பினர் இது குறித்துப் பேசுகையில், "நான் தான் அரசின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றேன். அவருக்கு இப்போது வண்டி கொடுத்திருக்கிறார்கள்.
மேலும் அவருக்கு மாத உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ அட்டைகளும் வழங்கி உள்ளோம். இலங்கேஸ்வரனுக்கு குடும்பம் கிடையாது. அவர் தனியே வாழ்ந்து வருகிறார். யார் உதவியும் இல்லாததால், அவர் பேருந்தில் ஏறி இறங்குவது கஷ்டம். அதை உணர்ந்துதான் போர்க்கால நடவடிக்கை எடுத்து அரசு அவருக்கு உதவி செய்திருக்கிறது" என்கிறார்












Click it and Unblock the Notifications