தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசு - பிரதமருக்கு அவசர கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை : இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கை மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும், இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை தடுக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி தங்கள் வசம் வைத்து இருந்தது.
தமிழக மீனவர்களின் படகுகளை சிங்கள அரசு ஏலம் விடுவதை இந்தியா வேடிக்கை பார்க்கக்கூடாது: ராமதாஸ்
இந்த படகுகளை ஏலம் விடும் பணி இன்று தொடங்கியது. முதல் கட்டமாக 65 படகுகள் இன்று ஏலம் விடப்படுகின்றன. இலங்கையில் உள்ள காரை நகரில் ஏலம் விடுவதற்கான பணிகளை இலங்கை அரசு மேற்கொண்டது.
முதல்வர் கடிதம்
இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை தடுக்கக் கோரி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில்,"இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, இலங்கை அரசு வசம் உள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 105 மீன்பிடிப் படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசின் மீன்வளம் மற்றும் நீரியல் வளத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது. எனவே இந்த நடவடிக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
படகுகள் ஏலம்
கடந்த 24.1.2022 அன்று எழுதிய கடிதத்தில், 2018 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறைப்பிடிக்கப்பட்ட 125 பழுதுபார்க்க இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை வெளிப்படையான முறையில் அகற்றுவதற்கான முயற்சிகளை இறுதி செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது. பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு சிறைப்பிடிக்கப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்படையினர் விரைவில் விடுவிக்க உறுதிசெய்ய வேண்டுமென்றும் அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இலங்கை அரசு
அதனைத் தொடர்ந்து, இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் 28-1-2022 தேதியிட்ட மின்னஞ்சலில், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் ஏலத்தை இலங்கைத் தரப்பு தொடராது என்றும் உறுதியளித்திருந்தது. மேற்குறிப்பிட்ட நோக்கத்திற்காக இலங்கை செல்லவிருந்த அதிகாரிகளின் உத்தேசப் பயணத் திட்டத்திற்கு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் இசைவாணை வழங்கியுள்ளதுடன், அப்பயணத்திற்கான புதிய தேதிகளை இறுதி செய்யுமாறும், இலங்கைத் தரப்பிடமிருந்து அதற்கான ஒப்புதலைப் பெற்று, விரைவில் (குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே) அதைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தீர்வு காண வேண்டும்
தமிழக அரசு முன்மொழிந்த தேதிகள் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், இந்தப் பயணத்திற்கான திருத்தப்பட்ட தேதி 1-3-2022 முதல் 6-3-2022 வரை என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், இலங்கை அரசு தான் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, எந்தவிதமான ஆலோசனையுமின்றி தொடர்ந்துள்ள ஏல நடவடிக்கை, இதற்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இந்தியத் தூதரகம் மற்றும் தமிழக அரசின் முயற்சிகளை தடம் புரளச் செய்வதாக அமையும். இந்த மீட்க முடியாத நிலையில் உள்ள மீன்பிடிப் படகுகள் உரிய நீதித் துறை நடைமுறைகளைப் பின்பற்றி, பல்வேறு இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம்
மேலே கூறப்பட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கையால் முன்மொழியப்பட்ட ஏலத்தைத் தடுத்து நிறுத்திடவும், 2018 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறைபிடிக்கப்பட்ட 125 பழுது பார்க்க இயலாத நிலையில் உள்ள தமிழகப் படகுகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்பார்வையிட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்களின் உத்தேசப் பயணத்திற்கு இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெறவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 2018-க்குப் பிறகு சிறைப்பிடிக்கப்பட்டு, இலங்கையின் பல்வேறு கடற்படைத் தளங்களில் நிறுத்தப்பட்டுள்ள 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிக்க பிரதமர் அவர்கள் அவசரமாகத் தலையிட வேண்டும். இதன்மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்." என தனது கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.