“இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே நினைக்கிறார்கள்.. அதனால்தான் ஜெயிக்கிறோம்”.. ஸ்டாலின் பேட்டி
சென்னை: "இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே நினைக்கிறார்கள். இந்து பக்தர்களின் நம்பிக்கைகளை நாங்கள் மதிப்பதால்தான் மக்கள் திமுகவுக்கு தொடர்ந்து வாக்கு அளிக்கிறார்கள்." என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சமீபத்தில் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், பெண்களுக்கு ரூ.1,000 மாதாந்திர உரிமைத்தொகை வழங்கும் திட்டம், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமை பெண் திட்டம், மாணவர்களுக்கான தமிழ்ப் புதல்வன் திட்டம் என பல லட்சக் கணக்கானவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டின் பொருளாதாரமும் சீராக வளர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

அதேசமயம், திமுக மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் எதிர்க்கட்சிகளால் சுமத்தப்பட்டு வருகின்றன. அமலாக்கத்துறை ரெய்டுகள் திமுகவினரை குறி வைத்து நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் நடந்து வரும் குற்றச் சம்பவங்களை சுட்டிக்காட்டி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
ஸ்டாலின் பேட்டி
இந்நிலையில் 'தி வீக்' ஆங்கில ஊடகம் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் சிறப்பு நேர்காணல் நடத்தி உள்ளது. இந்த நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பிரதமர் நரேந்திர மோடி பற்றி உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், "பிரதமர் மோடி, அரசியலின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். திருக்குறளை அவர் தனது உரைகளில் நினைவு கூர்ந்தாலும், அவரது இயக்கமும் சித்தாந்தமும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிரானதாக உள்ளது. எனவே தமிழர்களும் தமிழகமும் பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்." என்றார்.
மக்களிடம் சொல்கிறோம்
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க மறுத்து வரும் நிலையில் இதை எப்படி எதிர்த்துப் போராடப் போகிறீர்கள்? தமிழ்நாட்டின் நிதி நிலைமையை இப்போது எப்படி நிர்வகிக்க முடியும்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள ஸ்டாலின், "மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை குறித்து நாங்கள் மக்களிடம் தெரிவித்து வருகிறோம். சட்டப்பூர்வ வழிமுறைகள் மூலம் தீர்வு காண முயற்சிக்கிறோம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நாங்கள் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளோம். பாகுபாடு மற்றும் அநீதிக்கு எதிராகப் போராடி தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்ய நாங்கள் உறுதியாக இருக்கிறோம்." எனக் கூறியுள்ளார்.
இந்து விரோதி?
உங்களை இந்து விரோதி என்று அழைப்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள ஸ்டாலின், "இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே கருதுகிறார்கள். அனைத்து சமூக மக்களும் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். திமுக ஆட்சிக் காலத்தில்தான் இந்து கோயில்கள் அதிகமாகப் புத்துயிர் பெறுகின்றன. இந்து பக்தர்களின் நம்பிக்கைகளை நாங்கள் மதிப்பதால்தான் மக்கள் திமுகவுக்கு தொடர்ந்து வாக்கு அளிக்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக்
சில ஆண்டுகளுக்குப் பிறகு நிதி ஆயோக் கூட்டத்தில் நேற்று பங்கேற்றார் தமிழக முதல்வர் ஸ்டாலின். 10வது ஆண்டாக டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று இந்த கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து அவர் வலியுறுத்திப் பேசியிருந்தார்.
பள்ளிக்கல்வித் துறைக்கான தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதி; கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ திட்டங்கள்; அங்குள்ள விமான நிலையங்களை மேம்படுத்துவது; சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோவிடம் ஒப்படைக்க வேண்டும், செங்கல்பட்டு- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை 8 வழி சாலையாக மாற்ற வேண்டும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications