ஸ்டாலின் கொடுத்த டின்னர்.. 16வது நிதி ஆணைய குழுவை முதல்வர் வரவேற்றதை பாருங்க! பின்னணி இதுதான்
சென்னை: தமிழகத்துக்கு 4 நாள் பயணமாக 16-வது நிதி ஆணைய குழுவினர் வர உள்ள நிலையில், நிதி அமைச்சர் மற்றும் பொருளாதார நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் வரவேற்று டின்னர் வழங்கினார்.
மத்திய அரசின் நிதித்துறையின் கீழ் 16வது நிதி ஆணையம் செயல்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே வரி வருவாயை பகிர்ந்தளிப்பதில், நிதிக்குழுவின் பரிந்துரைகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

இந்த நிதி ஆணையத்தின் தலைவராக நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா செயல்பட்டு வருகிறார். மேலும் இந்த 16வது நிதி ஆணைய குழுவில் அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியாகாந்தி கோஷ் ஆகிய 4 உறுப்பினர்கள் உள்ளனர்.
இதற்கிடையே தான் 16வது நிதி ஆணைய குழுவினர் 4 நாள் பயணமாக தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று 16வது நிதி ஆணையத்தை சேர்ந்தவர்கள் இன்று சென்னை வந்தனர். ஆணைய குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் உறுப்பினர்கள், ஆணையத்தின் செயலர் ரித்விக் பாண்டே, இணை செயலர் ராகுல் ஆகியோர் உடன் வந்தனர். இவர்கள் நங்கநல்லூரில் வசிக்கும் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி ரங்கராஜன் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினர்.

அதன்பிறகு சென்னை கிண்டி ஐடிசி ஓட்டலில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை வரவேற்றார். அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு டின்னர் விருந்து வழங்கினார். இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், 16வது நிதி ஆணைய குழுவினரை வரவேற்ற போட்டோக்களை பதிவிட்டு அனைவரையும் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை தலைமை செயலகத்தில் 16வது நிதி ஆணைய குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றக உள்ளனர். அதன்பிறகு 16வது நிதிக்குழுவினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

அதன்படி நவம்பர் 19ம் தேதி நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பகுதி, ஸ்ரீபெரும்புதூரில் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி நிறுவனமான சால்காம்ப் வளாகத்தை ஆய்வு செய்கின்றனர். அதன்பிறகு ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். தரிசனத்துக்கு பிறகு நவம்பர் 20ம் தேதி தனுஷ்கோடி, ராமநாதபுரம் நகராட்சி, கீழடியில் தொல்லியல் அகழ்வு நடைபெறும் பகுதியை பார்வையிடும் குழுவினர் மதுரையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளனர்.












Click it and Unblock the Notifications