பெண்களுக்கான ஹாஸ்டல் வசதி.. 18,720 பேர் வரை தங்கலாம்.. காஞ்சிபுரம் சிப்காட்டில் திறந்து வைத்த ஸ்டாலின்!
சென்னை: காஞ்சிபுரம் வல்லம் வடகாலில் சிப்காட் மெகா தொழிற்சாலை பணியாளர்கள் குடியிருப்பு வளாகத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் 18,720 பெண்கள் தங்கும் வகையிலான இந்த குடியிருப்பின் திறப்பு விழாவில் ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு, அமைச்சர்கள் டிஆர்பி ராஜா பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சிப்காட் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தங்கி பணிபுரியும் வகையில் விடுதி வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் பெண்களின் பாதுகாப்புக்கு தனி முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தான் காஞ்சிபுரம் வல்லம் வடகாலில் சிப்காட் நிறுவனம் மூலம் ரூ.706 கோடி மதிப்பில் தொழிற்சாலை பெண் பணியாளர்கள் தங்கி பணிபுரியும் வகையில் அடுக்குமாடி குடியிருப்பு ஹாஸ்டல் கட்டப்பட்டுள்ளது.
வல்லம் வடகாலில் மொத்தம் 13 தொகுதிகளாக, 10 மாடிகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். ஃபாக்ஸ்கான் தலைவர் யாங் லீயு, அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, தாமோ அன்பரசன் உள்ளிட்டவர்கள் விழாவில் பங்கேற்றனர். இந்த ஹாஸ்டல் என்பது ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் 18,720 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் குடியிருப்பு வளாகமாக கட்டப்பட்டுள்ளது. இதனால் முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து ஃபாக்ஸ்கான் தலைவர் யாங் லீயுவும் கட்டடத்தை திறந்து வைத்தார்.
ஃபாக்ஸ்கான் என்பது ஆப்பிள் ஐபோன்களுக்கு உதிரி பாகங்களை பொருத்தும் பணியை மேற்கொண்டு வரும் பெரிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் முதலீடு செய்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை செய்ய ஆர்வமாக உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் 2 ஆலைகள் செயல்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் பெண் பணியாளர்கள் தங்க வசதியாக வல்லம் வடகாலில் ரூ.706 கோடியில் தமிழ்நாடு அரசுடன் சேர்ந்து ஃபாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் அடுக்குடிமாடி குடியிருப்புகளாக ஹாஸ்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 18,720 பெண் பணியாளர்கள் தங்க முடியும்.
தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில் ஒரு தொகுதியில் மொத்தம் 240 அறைகள் இருக்கும். மொத்தமுள்ள 13 தொகுதிகளில் மொத்தம் 3120 அறைகள் உள்ளன. டார்மெட்ரி முறையில் ஒவ்வொரு அறையிலும் 6 பேர் தங்கும் வகையில் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. 18,720 தொழிலாளர்கள் இந்த குடியிருப்பில் தங்க முடியும்.
மேலும் ஒவ்வொரு தொகுதியின் முதல் தளத்தில் 4000 பேர் அமரும் வகையில் உணவு அருந்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, 1170 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், சோலார் வாட்டர் ஹீட்டர், கொசு வலை, விளையாட்டு அரங்கங்கள், மழைநீர் சேகரிப்பு வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு வசதி, திடக்கழிவு மேலாண்மை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications