ஆட்டம் காட்டிய பயங்கரவாதிகளை தூக்கிய ATS ஸ்குவாட்.. தமிழக போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
சென்னை: தமிழ்நாடு காவல்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். "உள்நாட்டு பாதுகாப்பில், இந்தியாவிலேயே, தமிழக போலீஸ் முன்னணி வகிக்கிறது" என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதி அபூபக்கர் சித்திக் மற்றும் அவரது கூட்டாளி முகமது அலி ஆகியோர், தமிழ்நாடு ATS ஸ்குவாட் போலீசாரால் ஆந்திர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 1995 முதல் பல வெடிகுண்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்தனர்.

தமிழ்நாடு காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் படை (ATS) பல பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய அபூபக்கர் சித்திக்கை ஆந்திர பிரதேசத்தின் அன்னமய்யா மாவட்டத்தில் கண்டுபிடித்து கைது செய்தது. இவர் 2011-ல் முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரையின் போது மதுரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் தொடர்புடையவர்.
அபூபக்கர் சித்திக் 1995-ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த வெடிகுண்டு வெடிப்பு, அதே ஆண்டில் நாகூரில் தங்கத்தின் மரணத்திற்கு காரணமான பார்சல் வெடிகுண்டு வெடிப்பு, 1999-ல் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் கேரளாவில் ஏழு இடங்களில் ஒருங்கிணைந்த வெடிகுண்டு வெடிப்பு, 2012-ல் வேலூரில் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை, மற்றும் 2013-ல் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகம் அருகே நடந்த வெடிகுண்டு வெடிப்பு போன்ற பல வழக்குகளில் தொடர்புடையவர்.
பல தீவிரவாத சம்பவங்களில் மூளையாக செயல்பட்ட நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் மற்றும் நெல்லையைச் சேர்ந்த முஹமது அலி ஆகியோரை தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஜூலை 1 ஆம் தேதி கைது செய்தனர்.
அதேபோல், கோவையில் 1998 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 10) கர்நாடகாவில் தமிழக ATS பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு கோவையில் நடந்த கார் சிலிண்டர் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடுப்பு படையின் (ATS) பணிகளைப் பாராட்டி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நமது திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தபின், 2023 ஆம் ஆண்டில், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின் கீழ், பயங்கரவாத தடுப்பு படை (ATS) புதிதாக உருவாக்கப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளாக, தமிழக போலீஸ், மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநில போலீஸ் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் பயங்கரவாதிகளை, அண்மையில் நமது ATS படையினர் சிறப்பாகச் செயல்பட்டுக் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழக போலீஸ் முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள ATS படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய கர்நாடக மற்றும் ஆந்திர மாநில போலீசாருக்கும் எமது நன்றிகள்." என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications