தொழில் முனைவோருக்காக 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் தொழில்களையும் தொழில் முனைவோரையும் ஊக்குவிக்க 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
சென்னையை அடுத்த குன்றத்தூரில் இன்று கலைஞர் கைவினைத் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

5 முக்கிய அறிவிப்புகள்
1. அறிவுசார் சொத்து உரிமையான புவிசார் குறியீடு பெறுவதற்கான மானியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
2. அம்புத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அளவியல் மற்றும் உலோகவியல் ஆய்வகங்கள் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும்.
3. காஞ்சிபுரத்தின் பழந்தண்டலத்தில் சாலை மற்றும் மழை நீர் வடிகால் அமைக்க ரூ.5 கோடி செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
4. காக்கலூர் தொழிற்பேட்டையில் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் ரூ.3.90 கோடி செலவில் அமைக்கப்படும்.
5. குறு மற்றும் சிறு நிறுவனங்கள் உள்நாட்டில் நடைபெறும் வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசு
மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாடு தொழில் துறை முன்னேற சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முக்கிய காரணம்.
சிறு, குறு தொழில் துறையில் நாட்டில் தமிழ்நாடு 3ஆவது இடத்தில் உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டத்தை கடுமையாக எதிர்த்தோம். குலத் தொழிலை ஊக்குவிப்பதாக உள்ளது விஸ்வகர்மா திட்டம். குடும்ப குலத் தொழிலை ஊக்குவித்து வெளியுலகையே காணாமல் இருக்கச் செய்கிறது பாஜக. விஸ்வகர்மா திட்டத்தின்மூலம் இளைஞர்களை குலத் தொழிலில் தள்ளப் பார்க்கிறது பாஜக குலக் கல்வியை ஊக்குவிக்கும் இத்திட்டத்தை நாங்கள் ஒருபோதும் செயல்படுத்த மாட்டோம்.
கலைஞர் கைவினைத் திட்டம்
விஸ்வகர்மா திட்டத்தில் தமிழகம் குறிப்பிட்ட 3 மாற்றங்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டம் சமூக நீதிக்கு எதிரானது. அதில் இணைய குறைந்தபட்ச வயது 18. விஸ்வகர்மா திட்டத்துக்கு மாற்றாக தமிழக அரசு கொண்டு வந்திருப்பதுதான் கலைஞர் கைவினைத் திட்டம். சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத வகையில் உருவாக்கப்பட்டதே கலைஞர் கைவினைத் திட்டம்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications