ஓட விடுறாரு முதல்வர்.. சேகர்பாபுவை பார்த்து பொறாமை.. அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேச்சு!
சேகர்பாபுவை பார்த்து எங்களுக்கு பொறாமையாக உள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓடுவதால் தான் நாங்கள் ஓடிக் கொண்டிருக்கிறோம், எங்களை ஓடவைக்கக்கூடிய முதலமைச்சர் அதிகாரிகளையும் ஓடவைத்துக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டு வாசல் வரைதான் நாங்கள் அமைச்சர் எல்லாம். வீட்டுக்குப் போய்விட்டால் பெண்கள் தான் அதிகாரம் மிக்கவர்கள் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
மேலும், அமைச்சர் சேகர்பாபு மீது பொறாமையாக இருப்பதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியுள்ளார்.

அமைச்சர்கள்
தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சென்னை மண்ணடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு எங்கள் மேன்மை இறையாண்மை நல்லிணக்க அரங்க துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சேகர்பாபுவை பார்த்து பொறாமை
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், "சேகர்பாபுவை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். ஏதாவது வேலை வாங்கித் தாங்க என்று என்னிடம் வேலை கேட்டு வந்தார். நா அப்போது அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருந்தால் இன்று உங்களுக்கு வேலை பார்க்க ஆள் இருந்திருக்காது. சேகர்பாபுவை பார்த்து எங்களுக்கு பொறாமையாக உள்ளது. ஒரு மனிதன் எப்படி எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்க முடியும் என்று பொறாமையாக இருக்கிறது.

ஆண்களுக்கு இலவச பயணம் கொடுத்தால்
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆண்களுக்கு ஏன் இலவசமாக பேருந்து பயணம் வழங்கவில்லை? நமக்கு கொடுத்தால் எங்கே போய் சேரும் என்று எல்லாருக்கும் தெரியும். வீட்டு வாசல் வரைதான் நாங்கள் அமைச்சர் எல்லாம். வீட்டுக்குப் போய்விட்டால் எங்களுடைய பதவியெல்லாம் மனைவியிடம் சென்றுவிடும். பெண்களுக்கு மரியாதை அளிக்கும் நாடுதான் தமிழ்நாடு." என்றார்.

ஓடவைக்கும் முதல்வர்
மேலும் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் , முதலமைச்சர் ஸ்டாலினின் சுற்றுப் பயணத்தை பார்த்தால் எங்களுக்கே ஆச்சரியமாக உள்ளது. அவர் ஓடுவதால் தான் நாங்கள் ஓடிக் கொண்டிருக்கிறோம். எங்களை ஓடவைக்கக்கூடிய முதலமைச்சர் அதிகாரிகளையும் ஓடவைத்துக் கொண்டிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications