லண்டனில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பென்னிகுயிக் குடும்பத்தினர்!
சென்னை: இங்கிலாந்து சென்றுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கின் குடும்பத்தினரை சந்தித்தார். பென்னிகுயிக் சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் - செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது பிரிட்டனில் அவர் உள்ளார். இந்நிலையில் லண்டனில் இருந்து சென்னை புறப்படுவதற்கு முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக்கின் குடும்பத்தினரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

பென்னிகுயிக் குடும்பத்தினருடன் ஸ்டாலின் சந்திப்பு
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் - செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர். நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம். வாழ்க JohnPennyCuick அவர்களது புகழ்" எனத் தெரிவித்துள்ளார்.
பென்னிகுயிக்
தென் மாவட்ட மக்களின் குலசாமியாக, காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார் கர்னல் ஜான் பென்னிகுயிக். முல்லைப்பெரியாறு அணைக்காக தன் உழைப்பையும், சிந்தனையையும் கொட்டிய பென்னிகுயிக், தென் தமிழக மக்களின் தெய்வமாக பார்க்கப்படுகிறார். ஆண்டு தோறும் அவரது பிறந்தநாளை பொங்கல் வைத்து படையல் செய்து வழிபடுகின்றனர்.
பிரிட்டனில் பிறந்து வளர்ந்த பென்னி குயிக், பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் பொதுப்பணித்துறை என்ஜினீயராக பணியாற்றியவர். தென் தமிழக மக்கள் வைகை பாசனத்தை நம்பியிருந்த சூழலில் மழை பொய்த்து பஞ்சத்தில் தவிப்பதை கண்டு மனம் வருந்தி, முல்லை பெரியாறு அணை திட்டத்தை உருவாக்கினார். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது சொத்துகளை விற்று அணையை கட்டி முடித்தார்.
முல்லைப் பெரியாறு
தமிழகத்தின் தென் மாவட்டமான தேனியில் முல்லை பெரியாறு அணையை வெற்றிகரமாக கட்டி முடித்து மக்களுக்குப் பயன்படக் காரணமான பென்னி குயிக்கை மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர் மாவட்ட மக்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு அரசால் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பென்னிகுயிக் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இருக்கும் பல விவசாயக் குடும்பங்களின் வீடுகளில் பென்னிகுயிக் படம் வைக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல விவசாயக் குடும்பத்தினர் வீடுகளில் தங்கள் குழந்தைகளுக்கு பென்னிகுயிக் என்று பெயர் வைக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது.












Click it and Unblock the Notifications