குடியரசுத் துணை தலைவர் ஜெகதீஷ் தன்கரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: தமிழக நலன் சார்ந்த கோரிக்கை தொடர்பான மனுவை அளிக்க பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் சந்திக்கிறார்.
மாமல்லபுரத்தில் 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் இந்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்ததாக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதிவிட்ட ட்வீட்டில் விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரு பண்புகள் ஆகும். தொடர்ச்சியாக உங்களது ஆதரவையும் இது போன்ற இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என அந்த ட்வீட்டில் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்றார். அவரை திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிரதமர் மோடியை இன்று மாலை 4.30 மணிக்கு சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்கிறார். தமிழகத்திற்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் வைத்திருக்கிறார். அந்த மசோதாக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அவருக்கு அறிவுறுத்த வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைக்கவுள்ளார்.
அது போல் புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை காலை 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு புத்தகங்களையும் பரிசாக அளித்தார். அடுத்தது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் நேரில் சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின். நேற்று நடந்த திருமாவளவன் மணிவிழாவில் நான் டெல்லிக்கு என்ன காவடி எடுக்கவா போகிறேன் என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications