தொழு நோயாளிகளை சிறையில் அடைத்தனர்.. விடிய விடிய தாக்கினர்.. மிசா கால சவால்களை பகிர்ந்த ஸ்டாலின்
சென்னை: தனது மிசா கால அனுபவங்களை முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார். தொழு நோயாளிகள் சிறையில் தாங்கள் அடைக்கப்பட்டதாகவும், மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சுமார் ஓராண்டு வரை சிறையில் இருக்க வேண்டி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்களிடம் சென்று சேர திமுகவினர் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக 'வைப் வித் எம்.கே.எஸ்.' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கலந்து கொண்டு வருகிறார். அதன்படி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

மிசா கால அனுபவங்கள்
இதில் ஸ்டாலின் தனது மிசா கால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோவில் ஸ்டாலின் கூறுகையில், "1976 ஜனவரி 31ம் தேதி நான் கைதானேன். அப்போது திமுக ஆட்சி கலைக்கப்பட்ட உடனேயே கருணாநிதி வீட்டிற்கு போலீஸ் வந்துவிட்டது. அவரிடம் உங்களைக் கைது செய்ய வரவில்லை. உங்கள் மகனைக் கைது செய்ய வந்துள்ளோம் எனச் சொல்லி இருக்கிறார்கள். அப்போது நான் டிராமாக்களில் நடித்து வந்தேன். அதனால் வீட்டில் இல்லை.
அப்போது கருணாநிதி, 'ஸ்டாலின் நாடகத்திற்குச் சென்றுள்ளார். நாளை இரவு தான் வருவார். வந்தவுடன் நானே போன் செய்கிறேன். வந்து கூட்டிவிட்டு போங்கள்' என போலீசாரிடம் சொல்லியுள்ளார். நான் வீட்டு சென்றதும் அது குறித்து என்னிடம் தெரிவித்தார். கமிஷனிடம் இது குறித்துச் சொல்லப் போகிறேன். அரஸ்ட் ஆக ரெடியாகு என்றார். நானும் ரெடி ஆனேன். எனக்கு அதுதான் முதல் சிறை.
தொழு நோயாளிகள்
சட்டப்படி கைதிகளை இரவு நேரத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லக்கூடாது. ஆனால், என்னை இரவோடு இரவாக அழைத்துக் கொண்டு போனார்கள். உள்ளே அப்படியே எனக்குச் சுடுகாடு மாதிரி இருந்தது. முழுசாக இருட்டாக இருந்தது. ஒவ்வொரு செல்லிலும் கைதிகளை அடைத்து வைத்து இருந்தார்கள். ஒரே சத்தமாக இருந்தது. என்னைக் கடைசியாக இருந்த 9வது பிளாக் அழைத்துச் சென்றனர். பொதுவாக அங்குத் தொழு நோய் இருப்பவர்களைத் தான் அடைத்து வைத்து இருப்பார்கள். ஆனால், அங்கு தான் என்னை அழைத்துச் சென்றார்கள். சுவரில் பஞ்சு, ரத்தம் எல்லாம் அப்படியே இருந்தது. அங்கு வரிசையாக 11 ரூம்கள் இருந்தது.
கோபம் ஏன்
அங்கு இருவர் மட்டுமே தாராளமாகப் படுக்க முடியும். ஆனால், ஒவ்வொரு ரூமிலும் ஒன்பது பேரை அடைத்து இருந்தனர். அவர்கள் வரிசையாகப் படுத்துக் கொண்டு இருந்தனர். நான் உள்ளே சென்றேன். அப்போது இருட்டில் தெரியாமல் யாருடைய கையையோ மிதித்துவிட்டேன். யாரே எனப் பார்த்தால் வீரமணி!
சென்னை சிறையில் மட்டுமே மிசா காலத்தில் இதுபோன்ற அடக்குமுறை இருந்தது. ஏனென்றால் சென்னை சிறைச்சாலை வித்யாசாகர்ன்னு ஒரு எஸ்பி இருந்தார். அவர் பச்சையப்பா கல்லூரி தேர்தலில் நின்றுள்ளார். அவரை திமுகவின் என்விஎன் சோமு தோற்கடித்துவிட்டார். இதனால் அவருக்குக் கோபம்.
மிக மோசமாக நடத்தினார்கள்
மிசா கைதிகள் என்பவர்கள் அரசியல் கைதிகள். அவர்களுக்குத் தினசரி ரூ.40 முதல் ரூ.60 வரை செலவழிக்க வேண்டும். ஃபேன், பெட், கொசுவலை தர வேண்டும். பேஸ்ட், பிரஷ் கொடுக்க வேண்டும். ஆனால், எங்களுக்கு எந்த வசதியும் கிடையாது. 9 பேரையும் ஒரே ரூமில் அடைத்தனர். பாத்ரூம் போக ஒரு பானை. பக்கத்திலேயே குடி தண்ணீருக்கும் ஒரு பானை என்றே வைத்திருந்தனர். கழிப்பறையும் போதியளவு இருக்காது.
இரவுக்கு மேல் ஆயுள் கைதிகளை வைத்து அடிக்க வைப்பார்கள். கட்சியில் இருந்து விலகிவிடுகிறேன் என எழுதித் தரும்படி கட்டாயப்படுத்துவார்கள். சிலர் அடிக்குப் பயந்து கையெழுத்து போட்டு கொடுத்தார்கள். ஆனால், நாங்கள் உயிரே போனாலும் முடியாது எனச் சொல்லிவிட்டோம். மிசாவில் எங்களைக் கைது செய்திருந்ததால் நீதிமன்றத்திற்கும் போக முடியவில்லை" என்றார். மேலும், சுமார் ஓராண்டு வரை சிறையில் இருக்க வேண்டி இருந்ததாகவும் அதன் பிறகே வெளியே வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications