காலையிலேயே.. நேராக மெரினா சென்ற முதல்வர் ஸ்டாலின்.. அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை- நெகிழ்ச்சி
முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறார்.
சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று தனத 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இன்று காலையில் அவர் சென்னை மெரினாவுக்கு சென்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அங்கு பெரியார் நினைவிடத்துக்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து இன்று காலை 9 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் கட்சி சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இன்று மாலையில் சென்னை நந்தனத்தில் கட்சி சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பிற கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளனர்.

கருணாநிதி நினைவிடம்
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி இன்று காலையில் மெரினா கடற்கரைக்கு காரில் சென்றார். அங்குள்ள மறைந்த முதல்வர் அண்ணா மற்றும் ஸ்டாலினின் தந்தையும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தயாளு அம்மையாரிடம் ஆசி
அதன்பிறகு அவர் அங்கிருந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அங்கு வீரமணி உள்ளிட்டவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்குள்ள பெரியார் நினைவிடத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கோபாலபுரம் சென்ற முதல்வர் ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளை நேரில் சந்தித்து வாழ்த்து மற்றும் ஆசி பெற்றார். மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உருவப்படத்துக்கு ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கேக் வெட்டிய முதல்வர்
இதையடுத்து காலை 9 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் கட்சி தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற தொடங்கினார். மேலும் அங்கு அவர் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் அண்ணா அறிவாலய வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் மரக்கன்று நடவு செய்தார். மேலும் அவரை அரசு துறையின் முக்கிய அதிகாரிகள் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திராவிட பொன்நாள்
முதல்வர் ஸ்டாலினை பெருமைப்படுத்தும் வகையில் கருணாநிதியின் நினைவிடத்தில் அலங்காரத்துடன் கூடிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதில், ‛‛மார்ச் 1 திராவிட பொன்நாள்'' எனவும், ‛‛முயற்ச்சி.. முயற்ச்சி.. முயற்ச்சி.. அதுதான் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் '' என எழுதப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications