T.R.Balu: ஸ்டாலினை பார்த்ததும் கையை பிடித்து! மனைவியை காட்டி டி.ஆர்.பாலு கண்ணீர்! சோகத்தில் ராஜா!
சென்னை: முன்னாள் அமைச்சரும், லோக்சபா எம்பியுமான டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகா தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது முதல்வர் ஸ்டாலினை பார்த்ததும் துக்கம் தாளாமல் டி.ஆர்.பாலு கதறி அழுத காட்சிகள் காண்போரை கலங்கச் செய்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: முன்னாள் மத்திய மந்திரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் துணைவியாரும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி பாலு மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் ரேணுகா தேவி பாலு. அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு.
அன்னாரை இழந்து தவிக்கும் நண்பர் டி.ஆர்.பாலு, தம்பி டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேணுகா தேவியின் மறைவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், மாநிலங்களவை எம்பி கமல்ஹாசன், திருப்பூர் எம்எல்ஏ செல்வராஜ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் டி.ஆர்.பாலுவின் மனைவ ரேணுகா தேவிக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன் ஆகியோர் அவரது இல்லத்திற்கு சென்றிருந்தனர்.
முதல்வர் வருவதை அறிந்த டி.ஆர்.பாலு தனது மனைவியின் இழப்பை எண்ணி துக்கம் தாளாமல் அழுதார். அப்போது முதல்வர், பாலுவின் கையை பிடித்து அழைத்துச் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது துணை முதல்வர் உதயநிதியை பார்த்தும் பாலு கதறி அழுதார். டி.ஆர்.பி.ராஜாவோ முகம் முழுவதும் சோகத்துடனும் தொண்டையில் அடைந்திருந்த துக்கத்துடனும் காணப்பட்டார்.
டி.ஆர்.பாலு, ராஜா, அவரது மனைவி, பாலுவின் உறவினர்களுக்கு முதல்வர் குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் டி.ஆர்.பாலு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்திருந்தது. இதனால் அவர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். கப்பல் மற்றும் தரை வழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
திமுகவின் மூத்த உறுப்பினரான டி.ஆர்.பாலு, கருணாநிதி குடும்பத்துடன் நல்ல உறவில் இருந்து வருகிறார். அது போல் டி.ஆர்.பி.ராஜாவும் உதயநிதி ஸ்டாலினும் நண்பர்களாவர். இரு தலைமுறைகளாக இந்த நட்பு தொடர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications