ஊர் பிரச்சனையை தனது பிரச்சனையாக கருதியவர் நடராஜன்! மறைந்த வழக்கறிஞர் பற்றி முதல்வர் புகழாரம்!
சென்னை: திமுகவுக்காக சட்ட நுணுக்கங்கள் அறிந்த பல வழக்கறிஞர்களை உருவாக்கி தந்தவர் நடராஜன் என முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மறைந்த நடராஜன் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அந்த விழாவில் பேசியதாவது;

வாதாடி வெற்றி
தலைமை பொறுப்பேற்று அவருடைய சிறப்புக்களை, அவருடைய பெருமைகளை, அவருடைய பணிகளை முதலாவதாக எடுத்து வைத்து உரையாற்றி அமர்ந்திருக்கக்கூடிய இந்து குழுமத்தினுடைய இயக்குநர் மூத்த பத்திரிக்கையாளர் மதிப்பிற்குரிய திரு.என்.ராம் அவர்களே!
இந்திய தண்டனைச் சட்டம், இந்திய அரசியல் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களிலும் வல்லுநராக விளங்கிய நடராஜன் அவர்கள், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழக்கறிஞராக பல வழக்குகளில் வாதாடி வெற்றி கண்டவர் அவர்.

சட்டநாதன் மருமகன்
நாடு விடுதலை அடைந்து பல ஆண்டுகளுக்கு பின்பு பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, அவர்களுடைய முன்னேற்றத்திற்காக ஒரு கமிஷன் அமைக்க வேண்டுமென்று பல ஆண்டு காலம் ஒரு கோரிக்கை இருந்து வந்தது. அந்த கோரிக்கையை ஏற்று நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் 1969-ஆம் ஆண்டு சட்டநாதன் தலைமையில், ஒரு ஆணையத்தை அமைத்து அந்த ஆணையம் 300 பக்கங்களைக் கொண்ட ஒரு அறிக்கையினை அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தான், 25 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 31 சதவீதமாக மாற்றப்பட்டது. பின்பு 50 சதவீதமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இப்படி வரலாற்று சிறப்புமிக்க அறிக்கையினை நமக்கு அளித்த சட்டநாதன் அவர்களின் மருமகன்தான் நம்முடைய மூத்த வழக்கறிஞர் நடராஜன் அவர்கள் ஆவார்கள். இப்படி ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர்.

நீதித்துறை
நீதித்துறைக்கு மட்டுமின்றி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அனுபவமிக்க சட்ட நுணுக்கங்கள் தெரிந்த பல வழக்கறிஞர்களை உருவாக்கித் தந்த பெருமைக்குரியவர் அவர் என்பது எல்லோருக்கும் தெரியும். நீதியரசர்களுடைய நன்மதிப்பைப் பெற்றவராக விளங்கினார். இங்கே எல்லோரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள், மும்பை குண்டு வெடிப்பு. அந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு வாதாடிய அவர், வழக்கறிஞர் தொழிலுக்கான நேர்மை, அறிவுக்கூர்மை, நம்பிக்கை என அனைத்தையும் தன்னகத்தே கொண்டவர்.

நடராஜனின் மறைவு
சட்ட நிபுணத்துவம் நிறைந்த சட்ட அனுபவத்தின் இமயமாக விளங்கிய நடராஜனின் மறைவு நீதித்துறைக்கும் மட்டுமல்ல, கழகத்திற்கும் மிகப் பெரிய இழப்பாக அமைந்திருக்கிறது. அவரை இழந்து வாடிக் கொண்டிருக்கக்கூடிய அவருடைய குடும்பத்தினருக்கும், நீதித்துறையைச் சார்ந்திருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.'' - என்று அப்போது நான் குறிப்பிட்டேன். அவருடைய இழப்பு என்பது வழக்கறிஞர்களுக்கு நீதித் துறைக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல. எங்களைப் போன்றவர்களுக்கும் ஏற்பட்ட இழப்புதான் என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அட்வகேட் ஜெனரல்
நம்முடைய மரியாதைக்குரிய அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரமாக இருந்தாலும் சரி, இங்கே அமர்ந்திருக்கக்கூடிய மாநிலங்களவை உறுப்பினர் என். ஆர். இளங்கோவாக இருந்தாலும் சரி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் குமரேசன் போன்றவர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் நடராஜன் அவர்கள் சீனியர்தான்.இங்கே சண்முகசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார், தலைவர் கலைஞர் அவர்களே, 'எப்போதும் நடராஜனைப் பார்த்தால், வாங்க சீனியர், சொல்லுங்க சீனியர், உட்காருங்கள் சீனியர்' என்றுதான் அழைப்பார். அந்தளவுக்கு தலைவரின் மரியாதையைப் பெற்றவர் நம்முடைய நடராஜன் அவர்கள்.

மிகப்பெரிய சோதனை
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு, குறிப்பாக தலைவர் கலைஞர் அவர்களுக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டது. எல்லோருக்கும் தெரியும். ஜெயின் கமிஷன் மூலமாக அந்த சோதனை வந்த நேரத்தில், தன்னுடைய வாதங்களின் மூலமாகக் காத்தவர் நம்முடைய நடராஜன் என்பதை யாரும் மறந்திடமுடியாது. நாங்கள் நிச்சயமாக எங்களுடைய வாழ்நாள் முழுவதும் அதை மறக்க முடியாது.அதைப்போல, 1996-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அதற்கு முன்பிருந்த அதிமுக ஆட்சி காலத்து ஊழல்கள் தொடர்பாக, தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட வேண்டும் என்று முடிவெடுத்தபோது, சீரிய ஆலோசனைகளைச் சொன்னவரும் நடராஜன் அவர்கள் தான்.

வலுவான ஆதாரம்
இங்கே இருக்கிற சண்முகசுந்தரம், இளங்கோ அவர்களுக்குத் தெரியும். முதல்வர் கலைஞர் அவர்கள் நடராஜனை அழைத்து பேசும்போது 'எந்த வழக்கில் வலுவான ஆதாரம் இருக்கிறதோ அந்த வழக்கை மட்டும் போட்டால் போதும்' என்று சொன்னார்கள். அதேபோல சட்டபூர்வமான, வலுவான ஊழல் ஆதாரங்கள் உள்ள புகார்களை மட்டும் அன்றைக்கு நாம் போட்டோம். அதுதான் காலம் கடந்தாலும் இறுதியில் வென்றது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றத்தில், கால் நூற்றாண்டு காலம் கொடிகட்டிப் பறந்த வழக்கறிஞர் நடராஜன் அவர்கள். பின்னர் உச்சநீதிமன்றத்தில் வாதிடுவதற்காகச் சென்றார்கள். அப்போது, இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி அவர்கள் ஒன்றை குறிப்பிட்டார்கள். 'தி கிரிமினல் லெஜெண்ட் ஃப்ரம் தமிழ்நாடு' என்று இவரைச் சொல்லி இருக்கிறார் என்றால் அந்தளவுக்கு இந்தியாவினுடைய புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்தவர் நடராசன் அவர்கள்.

மும்பை வெடிகுண்டு
மும்பை வெடிகுண்டு வழக்கில் சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞராக என்.நடராஜன் அவர்கள் நியமிக்கப்பட்டபோது பலரும் ஆச்சரியப்பட்டார்கள். சி.பி.ஐக்கு எதிரான வழக்குகள் பலவற்றில் ஆஜரான ஒரு வழக்கறிஞரை சி.பி.ஐ தனது தரப்பு வழக்கறிஞராக எப்படி நியமித்தது என்று எல்லோரும் கேட்டார்கள். மிகப்பெரிய வெடிகுண்டு வழக்கில் ஆஜராவதற்கு சரியான வழக்கறிஞர் இந்தியாவிலேயே நடராஜன்தான் என்று சி.பி.ஐ.யை ஒப்புக்கொள்ள வைக்கும் அளவுக்கு வாதத்திறமையை எடுத்து வைத்து அவர் வெற்றி கண்டார்.

அச்சமில்லாமல்
இன்னும் சொல்ல வேண்டுமானால், அந்த வழக்கில் துளிகூட அச்சமில்லாமல் அவர் ஆஜரானார். அதேபோல் ராஜீவ்காந்தியினுடைய கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு மரண தண்டனையை சி.பி.ஐ நீதிமன்றம் வழங்கியது. உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்யப்பட்டபோது, இதில் 19 பேரை மரண தண்டனையில் இருந்து விடுவிக்கும் அளவுக்கு வாதங்களை வைத்தவர் நம்முடைய நடராஜன் அவர்கள்.

ஃப்ரம் இந்தியா
இப்படி பல்வேறு வழக்குகளுக்காக பல்வேறு மாநிலங்களின் நீதிமன்றங்களில் வாதாடியவர் நடராஜன் அவர்கள். ராம்ஜெத்மலானி அவர்கள் சொன்னதைப் போல தி கிரிமினல் லெஜெண்ட் ஃபிரம் தமிழ்நாடு என்பதாக மட்டுமில்லாமல் 'ஃப்ரம் இந்தியா' என்று சொல்லத்தக்க வகையில் வழக்கறிஞர்களுக்கு எல்லாம் பெரிய வழக்கறிஞராக இருந்தவர் திரு.நடராஜன் அவர்கள்.

மோகன் குமாரமங்கலம்
பிற்காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இருந்த கைலாசம் அவர்களிடம் பயிற்சி பெற்றவர் நம்முடைய நடராஜன் அவர்கள். பிற்காலத்தில் இந்திரா அம்மையார் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மோகன் குமாரமங்கலம் அவர்களிடம் ஜூனியராக இருந்தவர். 1960 முதல் வழக்கறிஞராக பணியாற்றி வந்தாலும், 1975-76 ஆம் ஆண்டு கழக ஆட்சிக் காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பப்ளிக் பிராசிகியூட்டராக நியமிக்கப்பட்டார்.

கொடிகட்டிப் பறந்து
அவருடைய ஜூனியர்கள்தான் இன்று பல இடங்களில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்கள்.அவருடைய ஜூனியர்களில் ஒருவர்தான் நீதியரசர் சுந்தர் மோகன் அவர்கள்.சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ, குமரேசன் ஆகியோரை நீங்கள் எல்லோரும் நன்றாக அறிவீர்கள்.உச்சநீதிமன்றத்தில் கம்பெனி வழக்குகளை கையாள்வதில் திறம்படைத்த அரவிந்த் தத்தார், இவருடைய ஜூனியர்தான். என்.நடராஜன் அலுவலகம் என்பது கோர்ட் ஹாலை விட அதிகமான கூட்டம் இருக்கும் சேம்பராக இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரியும்.

பெரிய படையே
நீதிமன்றத்தின் ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு நடராஜன் நடந்து செல்கிறார் என்றால் பெரிய படையே அவரோடு போகும்.
அப்படி தன்னைப் போலவே பலரையும் உருவாக்கி, ஒரு மிகப்பெரிய சட்டப் பல்கலைக்கழகமாக விளங்கியவர் நம்முடைய நடராஜன் அவர்கள்.
ஊர் பிரச்னைகளை எல்லாம் தனது பிரச்சினையாகக் கருதி பல்வேறு வழக்குகளை நடத்தினாலும், எப்போதும் சிரித்த முகமாக இருப்பது நடராஜன் அவர்களது தனிச்சிறப்பு ஆகும்.

தொழிலுக்கு உண்மை
'உங்கள் தொழிலுக்கு உண்மையாக இருங்கள்.உங்கள் கட்சிக்காரர்களுக்கு உண்மையாக இருங்கள்.வாதிடும் நீதிமன்றத்துக்கு உண்மையாக இருங்கள்' - என்று அவர் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார். தனது அறிவுக் கூர்மையாலும், வாதத் திறமையாலும் நீதிமன்றங்களின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த திரு.நடராஜன் அவர்களுடைய புகழ் என்றும் நிலைத்து நீடிக்கும் என்று சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications