எ.வ.வேலுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! மனம் குளிர்ந்து பாராட்டிய ஸ்டாலின்! பின்னணி என்ன?
சென்னை: கருணாநிதியின் சிலை நிறுவும் பணிகளில் இமைப்பொழுதும் சோர்வடையாமல் சுற்றிச்சுழன்ற அமைச்சர் எ.வ.வேலுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார்.
இதேபோல் கருணாநிதியின் சிலையை உயிரேட்டமாக வடிவமைத்த திராவிடச் சிற்பி தீன தயாளனின் அரும்பணி பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியது எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது;

இடம் தேர்வு
சென்னை அண்ணா சாலையில் நம் ஆருயிர்த் தலைவரின் சிலை சிதைக்கப்பட்டு, ஏறத்தாழ 35 ஆண்டுகள் கழித்து, அதே அண்ணா சாலையில், தற்போதைய வளர்ச்சி - போக்குவரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எந்த இடத்தில் சிலை அமைக்கலாம் என்று சிந்தித்தபோது, என் எண்ணத்தில் தோன்றிய ஒரே இடம், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம்தான்.

மக்கள் பார்வைக்கு
தலைமைச் செயலகத்தை அரசியல் காழ்ப்புணர்வால் மருத்துவமனையாக மாற்றினாலும், கோபுரமாய் உயர்ந்து நிற்கும் அந்தக் கட்டடத்தில் கலசமாக என்றென்றும் ஒளிர்வது தலைவர் கலைஞரின் புகழ்தான். அதனால், அண்ணாசலையில் அமைந்துள்ள அந்த வளாகத்தில், பொதுமக்கள் பார்க்கும் வகையில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, அதற்குரிய இடத்தைத் தேர்வு செய்து கொடுத்தேன்.

இமைப்பொழுதும் சோர்வின்றி
தலைவர் கலைஞர் எப்படி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டபோது ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்துப் பார்த்து கட்டச் செய்தாரோ, அதுபோலவே அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளர கலைஞர் அவர்களின் சிலையினை அமைக்கும் பொறுப்பினைக் கொண்ட பொதுப் பணித்துறை அமைச்சரான எ.வ.வேலு , மிகக் குறைவான கால இடைவெளியில் சிலையை அமைக்கவேண்டிய தேவை கருதி, இமைப்பொழுதும் சோர்வடையாமல், தானே முன்னின்று ஒவ்வொரு பணியையும் சிறப்பாக மேற்கொண்டார்.

அமைச்சர் எ.வ.வேலு
தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை உயிரேட்டமாக வடிவமைத்த திராவிடச் சிற்பி தீனதயாளன் அவர்களின் அரும்பணியும் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியதாகும். சிலை உருவாக்கப் பணியை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஒவ்வொரு நாளும் நேரில் சென்று பார்வையிடுவதும், சிலை அமைக்கப்படும் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் வலுவான பீடம் அமைத்திடவும், சிலை அமையும் இடத்தைச் சுற்றிலும் பூங்கா போன்ற பசுமையை உருவாக்கிடவும் எடுத்துக்கொண்ட அவருடைய அயராத முயற்சிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.












Click it and Unblock the Notifications