“இதற்கெல்லாம் பதில் வருமா? இல்ல வழக்கம்போல..” பாஜக அரசுக்கு 7 கேள்விகள் எழுப்பிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மத்திய பாஜக அரசுக்கு 7 கேள்விகள் எழுப்பி உள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்து குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்? ஊழல்வாதிகள் பாஜகவின் கூட்டணிக்கு வந்த பின்பு, வாஷிங் மெஷினில் வெளுப்பது எப்படி? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் நேற்று பேசிய தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மிகக்குறைவான நிதி பங்கீட்டை பெறும் மாநிலம் தமிழ்நாடுதான். பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டும் பல மடங்கு நிதி வழங்கப்படுகிறது எனக் குற்றம்சாட்டினார். மேலும், மத்திய பாஜக அரசுக்கு 10 கேள்விகளை அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், மத்திய பாஜக அரசுக்கு , சமூக வலைதளத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்:
1. ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, Washing Machine-இல் வெளுப்பது எப்படி?
2. நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?
3. மத்திய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?
4. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
5. பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை #SIR ஆதரிப்பது ஏன்?
6. இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்?
7. கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?
இதற்கெல்லாம் பதில் வருமா? இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா?" என கேள்விகளை எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications