‛ஒன்னு கூடிட்டாங்களே’.. அகிலேஷிடம் வந்த ‛நீட்’ எதிர்ப்பு குரல்! கவனிக்க வைத்த ஸ்டாலினின் ரிப்ளை! ஆஹா
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தை தொடர்ந்து பல மாநிலங்களில் கோரிக்கைகள் வலுக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் பாஜக பயன்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தி சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு குரல் கொடுத்துள்ள நிலையில் அதற்கு முதல்வர் ஸ்டாலின் ‛டியர்' எனக்கூறி தந்த ரிப்ளை கவனம் பெற்றுள்ளது.
நம் நாட்டில் மருத்துவ படிப்பு பயில நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு என்பது தேசிய தேர்வு முகமையால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு உள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்து வருகிறது. இதற்கிடையே தான் கடந்த மே மாதம் 5ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது.
இந்த தேர்வு முடிவு வெளியான நிலையில் குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். மேலும் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையான நிலையில் தேர்வுக்கு முன்பே வடமாநிலங்களில் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாகவும் குற்றச்சாட்டுகளை மாணவர்கள் முன்வைத்தனர்.
இதனால் நீட் தேர்வை ரத்து செய்யக்கூறி உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இறுதி உத்தரவுக்கான வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே தான் நீட் முறைகேடு புகாரால் அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிற மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டங்களை தொடங்கி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் மட்டும் நீட் எதிர்ப்பு இருந்த நிலையில் தற்போது பிற மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில் தான் அகிலேஷ் யாதவ் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பாஜக பாணியில் நீட் தேர்வுக்கு எதிராக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‛‛ஒரே நாடு ஒரே கோரிக்கை.. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்'' என இரண்டு வரியில் கூறியுள்ளார். பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மொழி உள்ளிட்ட கொள்கைகளை முன்னெடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், நீட் தேர்வு எதிர்ப்பையும், ‛‛ஒரே நாடு ஒரே கோரிக்கை'' என்று பாஜக பாணியில் அகிலேஷ் வலியுறுத்தி உள்ளார்.
இந்த பதிவை பார்த்த முதல்வர் ஸ்டாலின், அகிலேஷ் யாதவுக்கு ரீப்ளே செய்துள்ளார். இதுதொடர்பான ஸ்டாலினின் பதிவில், ‛‛தமிழ்நாட்டின் சமூக நீதிக் குரலை உரக்க, தெளிவாக எதிரொலித்த அன்பு நிறைந்த அகிலேஷ் யாதவுக்கு நன்றி'' என்று கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இடையே நல்ல நட்பு இருப்பதும், இருவரின் கட்சிகளும் ‛இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications