பள்ளிக்காலத்தில் விருந்தினர்களை பேச விடாமல் சத்தம் போடுவோம்! நினைவலைகளை பகிர்ந்த முதல்வர்!
சென்னை: தனது பள்ளிக்காலத்தில் பள்ளிக்கு வரும் விருந்தினர்களை பேசவிடாமல் நண்பர்களுடன் சேர்ந்து சத்தம் போடுவோம் என தனது நினைவலைகளை பள்ளி மாணவர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும், அது போன்ற நிலை தனக்கு இன்று ஏற்படாது என நம்புவதாக தனியார் பள்ளி மாணவர், மாணவிகளிடையே பேசியிருக்கிறார்.
தனது பெயரன் மற்றும் பெயர்த்தி படிக்கக்கூடிய பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் நிகழ்த்திய உரையின் விவரம் பின்வருமாறு;

கல்வி முக்கியம்
கல்வி என்பது மனிதச் சமுதாயத்தினுடைய அடிப்படைகளில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தரமான கல்விதான், ஒரு மனிதனை அறிவுள்ளவனாக நல்வழிப்படுத்தி, அவனுடைய உயர்வுக்கு உறுதுணையாக இருக்கும். அத்தகைய கல்வியினை வழங்கும் நிறுவனமாக இந்த 'சிஷ்யா பள்ளி' செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. "குழந்தைகளிடம் இருந்து குழந்தைப் பருவம் களவாடப்படக் கூடாது" என்பது தான் சிஷ்யா பள்ளி நிறுவனரின் சிந்தனை. இன்றைய காலகட்டத்தில் எல்லாரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய - உணர வேண்டிய சிந்தனை இது.

பெருமைப்படுகிறேன்
அப்படிப்பட்ட இந்தப் பள்ளியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இந்தப் பள்ளியில் என்னுடைய பெயரன், பெயர்த்தியும் கூட படித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு இங்கு வந்தவுடன் ஒரு எண்ணம் வந்தது. பேரனையும், பேத்தியையும் உடனே பார்த்தேன். நான் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலையில், அவர்களை அடிக்கடி என்னால் பார்க்க முடியாது. இது மாதிரி, பள்ளிக்கூட நிகழ்ச்சிக்கு வந்தால்தான் பார்க்க முடியும். அதற்காகவே அடிக்கடி பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு வந்தது.

பெயரன் -பெயர்த்தி
அதற்காக, பள்ளி நிர்வாகம் அடிக்கடி என்னை கூப்பிடக்கூடிய முயற்சியில் ஈடுபட்டு விடாதீர்கள். ஏனென்றால், எனக்கு இருக்கக்கூடிய பணி அப்படி. இந்தப் பள்ளியில் அவர்கள் படித்துக் கொண்டிருப்பது உள்ளபடியே எனக்குப் பெருமையாக இருக்கிறது. என்னுடைய பேரப் பிள்ளைகள் மட்டுமல்ல, இந்தப் பள்ளியிலே படிக்கக்கூடிய மாணவர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மாணவர்களுமே என்னுடைய செல்வங்கள் தான், என்னுடைய அன்புக்குரியவர்கள் தான், என்னுடைய பாசத்திற்குரியவர்கள்தான்.

நான் முதல்வன்
அதனால்தான் தரமான கல்வியை நமது அரசு - இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு, பல்வேறு திட்டங்களை அதற்காக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதெல்லாம் உங்களுக்குத் தெரியும். அண்மையிலே கூட, என்னுடைய பிறந்தநாள் அன்று 'நான் முதல்வன்' என்ற ஒரு திட்டத்தை நான் அறிமுகம் செய்தேன். நீங்கள் எல்லோரும் அந்தச் செய்திகளை பத்திரிகைகளிலும், மீடியாவிலும் பார்த்திருப்பீர்கள். Coding, Robotics போன்ற எதிர்காலத்திற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி, திறன்மிகு மாணவர்களாக அவர்களை உருவாக்கக்கூடிய திட்டம்தான் அந்தத் திட்டம். என்னுடைய நெஞ்சுக்கு நெருக்கமான திட்டம் என்று அதைச் சொல்லலாம்;

தடை இருக்கக்கூடாது
கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்று நினைக்கின்றவன் நான். அதுதான் திராவிடச் சிந்தனை. அந்தச் சிந்தனையோடு செயல்படுவதால்தான் நமது அரசை, 'திராவிட மாடல்' அரசு என்று நான் சொல்லிக் கொண்டு வருகிறேன்.












Click it and Unblock the Notifications