மோடியால் முடியாததை நான் சாதிப்பதால்.. எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல்.. ஸ்டாலின் ஆவேசம்!
சென்னை: இந்திய அளவில் பிரதமர் மோடியால் சாதிக்க முடியாத, மற்ற மாநில முதலமைச்சர்களால் சாதிக்க முடியாத பொருளாதார வளர்ச்சியை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சாதித்துக் கொண்டு இருக்கிறாரே என்ற வயிற்றெரிச்சலில் எடப்பாடி பழனிசாமி பேசுவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கண்டோண்ட்மெண்ட் பல்லாவரத்தில் 25 ஆயிரம் ஏழை, எளியவர்களுக்கு ரூ.1,700 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், கல்வியும் மருத்துவமனை மட்டுமே திராவிட மாடல் அரசின் இரு கண்கள். வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. காலிற்கு கீழ் நிலமும், தலைக்கு மேல் கூரையும் பலருக்குக் கனவாக உள்ளது. ஏழை மக்களுக்கு இலவச பட்டா என்பது பேருதவியாகும். 2021 முதல் தற்போது வரை சுமார் 17.74 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கி இருக்கிறோம்.
நிலம் என்பது அதிகாரம். பட்டா வழங்குவதில் எப்போதும் தனிக் கவனம் செலுத்தி வருகிறேன். கடந்த 5 மாதங்களில் மட்டும் 7.27 லட்சம் பேருக்கு பட்டாக்கள் வழங்கி இருக்கிறோம். இந்தியாவில் 11.19 சதவிகித வளர்ச்சியுடன் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. நாட்டின் வளர்ச்சியில் நாம் தான் மிஞ்சி நிற்கிறோம். இதுதான் ஸ்டாலின் ஆட்சி.
2011 முதல் 2021 வரை பின்னோக்கி சென்ற தமிழ்நாட்டை மீட்டெடுத்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறோம். வளர்ச்சி என்பது பொருளாதார அடிப்படையில் தான். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவு ஜீவி போல் அறிக்கை வெளியிடுகிறார். மோடியால் முடியாததை ஸ்டாலின் சாதிக்கிறார் என்பதே அவர்களுக்கு வயிற்றெரிச்சல்.
அதனைப் பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி தனது நண்பரான பாஜகவுடன் இணைந்து பேசுகிறார். திராவிட மாடல் 2.0 இன்னும் வேகமாக வளர்ச்சியடைந்து செல்லும். இந்தியாவே திரும்பிப் பார்த்து இதுதான் வளர்ச்சி என்று சொல்லும் அளவுக்கு செயல்படுவோம். தமிழக மக்கள் ஆதரவுடன் எங்கள் பயணம் தொடரும், தொடரும், தொடரும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications