இலக்கிய விருதிலும் அரசியல்.. சாகித்திய அகாடமி விருது நிறுத்தி வைக்க மத்திய அரசே காரணம்.. ஸ்டாலின்!
சென்னை: கலை, இலக்கிய விருதுகளில் கூட அரசியல் தலையீடு இருப்பது ஆபத்தானது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட இருந்த நிலையில், மத்திய அரசின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறிய ஸ்டாலின், இனி ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பாக தேசிய அளவில் தலா ரூ.5 லட்சம் பரிசுடன் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் புத்தக கண்காட்சியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், புத்தக வாசிப்புக்காக பல சிறப்பாக முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. புத்தக வாசிப்பு மூலமாக தமிழக இல்லங்களில் அறிவுத் தீ பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மனித மனம் தனது சிந்தனைகளை பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்பதே புத்தகங்களின் பயன்பாடு. வழக்கில் இருந்த பழமைகளை பொசுக்கி தமிழ்நாட்டை பண்படுத்தியது திராவிட இயக்கம். புத்தக திருவிழாவில் மொழிபெயர்ப்புகள், பதிப்பக பரிமாற்றம் ஆகியவற்றில் முக்கியத்துவம் செலுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபின் 4வது ஆண்டாக பன்னாட்டு புத்தக திருவிழா சென்னையில் நடத்தப்படுகிறது.
மொழி என்பது பிரிக்கக் கூடிய சுவர் அல்ல.. அது உலக மக்களை இணைக்கக் கூடிய பாலம். உலகின் உயரிய சிந்தனைகள் நம் மக்களுக்கு வந்துசேர வேண்டும் என்ற கனவு நிறைவேறி இருக்கிறது. தொழில் முதலீடு செய்ய மட்டுமல்ல, அறிவை பலப்படுத்தி கொள்வதற்கான சிறந்த மாநிலம் தமிழ்நாடு. உலகின் உயரிய சிந்தனைகள் தமிழக மக்களை வந்தடைய வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். மனிதநேயம், சமூகநீதியை பேசும் எங்கள் திராவிட இயக்க கருத்துக்களை உங்களுக்கு நாடுகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். சாகித்ய அகாடமி விருதுகள் மத்திய அரசின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கிய விருதுகளில் கூட அரசியல் தலையீடு இருப்பது ஆபத்தானது.
இனி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படைப்புகளுக்கு தமிழக அரசு சார்பாக செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும். தேசிய அளவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராட்டிய மொழிகளில் சிறந்து விளங்கும் படைப்புகளுக்கு விருது வழங்கப்படும். செம்மொழி இலக்கிய விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications