“தமிழ்நாட்டை அடிச்சிக்க வேற இடமே இல்லை.. பாராட்டிய பிரான்ஸ் கம்பெனி CEO! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: சென்னையில் இன்று தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய SAINT GOBAIN நிறுவனத்தின் சி.இ.ஓ சந்தானம் தொழில் முதலீடுகள் செய்ய தமிழ்நாட்டைப் போல சிறந்த இடம் வேறு எங்கும் இல்லை எனக் கூறினார். அதற்காக, அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
புதிய முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். அப்போது முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.51 ஆயிரம் கோடி மதிப்பிலான 28 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இன்று நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் SAINT GOBAIN நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சந்தானம் பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் இருப்பவர்களை போல மிகவும் திறமையான மற்றும் பொறுப்பானவர்களை வேறு எங்கும் பார்க்க முடியாது. மேம்பட்ட கல்வித்தரம் மற்றும் திறன்மிக்கவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
நிலையான ஆற்றலை பயன்படுத்தி தயாரிப்பை மேற்கொள்ள வேண்டும் எனறால் நீங்கள் தமிழ்நாட்டிற்கு தான் வர வேண்டும். முதலீடு செய்வதற்கான வழிமுறைகள் தமிழ்நாட்டில் தான் அதிக வெளிப்படைத் தன்மையுடன் உள்ளன. தொழில் முதலீடுகள் செய்ய தமிழ்நாட்டைப் போல சிறந்த இடம் வேறு எங்கும் இல்லை.
முதலீட்டாளர்களை தங்களது கூட்டாளிகளாகப் பார்ப்பது; ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு காண அரசு எடுக்கும் முனைப்பு உள்ளிட்ட விசயங்கள் தமிழ்நாட்டை முதலீடு செய்ய முன்னணி மாநிலமாக நிலை நிறுத்தியுள்ளன" எனத் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தொழில் முதலீடுகள் செய்ய தமிழ்நாட்டைப் போல சிறந்த இடம் வேறு எங்கும் இல்லை என தமிழ்நாட்டில் முதலீடு செய்வது பற்றி பெருமையாகப் பேசினார் SAINT GOBAIN நிறுவனத்தின் சி.இ.ஓ சந்தானம்.
இந்நிலையில், அவருக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாட்டின் வேகம், திறமை, வெளிப்படைத்தன்மை மற்றும் திறமைக்கு ஒரு சான்றாக, செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தானம் நற்சான்று அளித்துள்ளார்.
செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தானம், தமிழ்நாட்டின் பிராண்ட் அம்பாசிடராகப் பொறுப்பேற்றதற்கும், தெற்காசியாவிலேயே சிறந்த முதலீட்டு இடமாக நமது மாநிலத்தை உறுதிப்படுத்தியதற்கும் நன்றி." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications