விக்கிரவாண்டி வெற்றியால் குஷியான முதல்வர் ஸ்டாலின்! ரிசல்ட்டுக்கு பிறகு சொன்ன முதல் விஷயம் இதுதான்!
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கும், வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மக்களோடு இருக்கிறோம், மக்கள் எங்களோடு இருக்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,23,689 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் சி. அன்புமணி 56,030 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,009 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

திமுகவின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றியும், தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்ட மனநிலையில் திமுக தொண்டர்கள் உள்ளனர். சென்னையில் திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்திலும் திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நாற்பது தொகுதியிலும் நாற்பதுக்கு நாற்பது என்ற நூறு விழுக்காடு வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி பெற்றது. சாதாரண வெற்றியல்ல, பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியைப் பெற்றோம். அதிமுக கூட்டணி படுதோல்வியை அடைந்தது. பாஜக கூட்டணி, பாதாளத்தில் விழுந்தது. இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொண்டோம்.
விக்கிரவாண்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய புகழேந்தி அவர்கள் உடல்நிலை காரணமாக மறைவெய்தியதைத் தொடர்ந்து இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக ஆற்றமிகு உடன்பிறப்பு அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்தோம். நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வியில் எழ முடியாமல் இருந்த அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதே படுதோல்வியைச் சந்திக்கத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து பின்வாங்கியது. பாஜக, தனது அணியில் இருக்கும் பா.ம.க.வை நிறுத்தியது. 'இடைத்தேர்தலிலேயே நிற்பது இல்லை' என்று வைராக்கியமாக இருந்த பா.ம.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை.
தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி. அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீதும் குறிப்பாக என் மீதும் விதைத்து, தங்களது 100 விழுக்காடு தோல்வியை மறைப்பதற்காக மிகக் கீழ்த்தரமான பரப்புரையை பாஜக அணி செய்தது. பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகமே என்றும் எப்போதும் தேவை என்பதை இந்த இடைத்தேர்தலின் மூலமாக எடைபோட்டுச் சொன்ன விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேரகாலம் பார்க்காமல் உழைத்த உழைப்புக்கும், தினந்தோறும் உருவாக்கிக் கொடுத்த திட்டங்களுக்கும் மக்கள் தெரிவித்த நன்றியின் அடையாளமாகவே இந்த வெற்றியை நான் பார்க்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழக ஆற்றல்மிகு வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெற வைக்க பொறுப்பேற்றுக் கொண்ட கழக துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் க.பொன்முடி - கழக கொள்கைப் பரப்பு செயலாளரும் - நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் களம் கண்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் என பலரும் களப்பணி ஆற்றினார்கள். பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன், இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி உள்ளிட்ட முன்னணியினர் பலரும் தேர்தல் பரப்புரை செய்தார்கள். நமது இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார்கள். இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் - உடன்பிறப்புகளும் - தோழமைக் கட்சித் தோழர்களும், உதயசூரியனின் வெற்றிக்கு இரவு பகல் பாராது - கண்துஞ்சாது உழைத்த அனைவருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.
விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பொன் கௌதமசிகாமணி உள்ளிட்ட ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேநேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறாத கட்சி தான் பாஜக. இறங்கி வந்து சில கட்சிகளின் தயவால் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக. அத்தகைய தோல்வி முகமே பாஜகவுக்கு இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது.தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும்.
திமுக கழக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது. இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் நமது கழக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது. நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும் - வெற்றிப் பயணத்தையும் தொடர்கிறோம். மக்களோடு இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications