"சி.எம்.13.எப்.எஸ்".. தப்பவே முடியாது.. காலை உணவு திட்டத்தை கண்காணிக்க "ஆப்".. முதல்வர் அதிரடி!
சென்னை: பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு உள்ள காலை உணவு திட்டத்தை கண்காணிக்க தமிழ்நாடு அரசு சார்பாக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் முதல்முறையாக காலை உணவு திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த உணவு திட்டம் தற்போது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
பல மாநிலங்கள் வரும் நாட்களில் காலை உணவு திட்டத்தை தங்கள் பள்ளிகளிலும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் ரூ.33.56 கோடியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

காலை உணவு
முதல்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட உள்ளது. வரும் நாட்களில் இந்த திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டம் மூலம் நேரடியாக ஒரு லட்சத்து 14,095 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

செயலி
இந்த நிலையில்தான் காலை உணவு திட்டத்தை கண்காணிக்க தமிழ்நாடு அரசு சார்பாக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினே நேரடியாக திட்டத்தை கண்காணிக்கும் வகையில் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சி.எம்.13.எப்.எஸ் என்று இந்த செயலிக்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த செயலி மூலம் உணவு நேரத்திற்கு வழங்கப்படுகிறதா, மெனு சரியாக பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க முடியும்.

எப்படி?
முக்கியமாக இந்த திட்டத்தில் காலை 7.45 மணிக்குள் சமையல் பணிகள் முடிக்க வேண்டும். மாணவர்கள் காலை உணவு சாப்பிட 30 நிமிடம் முன் கூட்டியே வருவார்கள் என்பதால் உணவு தயாராக இருக்க வேண்டும். இதனால் நேரம் தவற கூடாது என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதை தற்போது இந்த செயலி மூலமே கண்காணிக்க முடியும். அதேபோல் மெனுவில் இருக்கும் உணவுகளை மட்டுமே கொடுக்க வேண்டும்.

கண்காணிப்பு
அந்த நாளுக்கு கொடுக்கப்பட்டுள்ள உணவு ஆப்ஷனில் இருந்து மட்டுமே தேர்வு செய்து உணவு சமைக்க வேண்டும். உணவுகளை மிகவும் சுத்தமாக சமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சார்பாக பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையும் தற்போது இந்த செயலி மூலம் எளிதாக கண்காணிக்க முடியும். உள்ளே அனைத்து தகவல்களும் தினமும் அப்டேட் செய்யப்படும். இதனால் இதில் ஏதேனும் தவறு இருந்தால் முதல்வர் உடனடியாக அதில் நடவடிக்கை எடுக்க முடியும்.












Click it and Unblock the Notifications