ஜூலை 13 இல் "வள்ளுவர் மறை வைரமுத்து உரை" நூல் வெளியீடு! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்!
சென்னை: கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை வைரமுத்து உரை எனும் நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட அதை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொள்கிறார். இந்த நிகழ்வு ஜூலை 13 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
உலக பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறள், தமிழின் பெருமைமிகு இலக்கியம் ஆகும். இது அறம், பொருள், இன்பம் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு திருவள்ளுவரால் எழுதப்பட்டிருக்கிறது. வாழ்க்கையின் பல்வேறு நெறிகளை எளிய முறையில் விளக்கும் இந்த குறள்கள் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு பலர் இதை படித்து வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிந்து கொண்டுள்ளனர்.

இந்த திருக்குறளுக்கு கவிஞர் வைரமுத்து சில மாதங்களுக்கு முன்பு உரை எழுத தொடங்கினார். 1330 குறள்களுக்கும் அவர் மே 22 ஆம் தேதியுடன் உரையை எழுதி முடித்துள்ளார். ஒவ்வொரு உரை எழுதி முடித்தவுடன் அந்த உரை எழுதி முடித்தாகிவிட்டது என்று குறிப்பிட்டு தனது அனுபவத்தையும் சமூகவலைதளங்களில் கூறி வந்தார்.
இந்த நிலையில் அந்த உரைக்கு பெயரையும் மே 22 ஆம் தேதியே அறிவித்திருந்தார். இதுகுறித்து அவர் சமூகவலைதளத்தில் வீடியோவில் கூறியிருப்பதாவது: திருக்குறள் நிறைவடைந்துவிட்டது. முப்பாலுக்கும் உரை எழுதி முடித்திருக்கிறேன். தலைப்பை அறிவிக்கப் போகிறேன்.. தருமரும், மணக்குடவரும், தாமத்தரும், நச்சரும், பரிதியும், பரிமேலழகரும், திருமலையரும், மல்லரும், பரிப்பெருமாளும், காளிங்கரும், பின்னாளில் வ.உ.சிதம்பரனாரும், தேவநேயப் பாவணரும், புலவர் குழந்தையும்
மு வரதராசனாரும், இன்னும் பல சான்றோர்களும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும், நாவலரும் எழுதி முடித்த பிறகும் கூட, திருக்குறளுக்கு இன்னும் உரை மிச்சப்பட்டிருக்கிறது. அதை நான் எழுதக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 1333 அருங்குறளுக்கும் உரை எழுதி முடித்த உடன் நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறேன். 'வள்ளுவர் மறை, வைரமுத்து உரை' என்று தலைப்பிட்டிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த புத்தக வெளியீட்டு விழா, வரும் ஜூலை 13 ஆம் தேதி அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் "வள்ளுவர் மறை வைரமுத்து உரை" என்ற நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட அதை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொள்கிறார்.
இந்த நிகழ்வுக்கு வாழ்த்துரை வழங்குவோர் முனைவரும், தமிழக முன்னாள் தலைமைச் செயலாளருமான இறையன்பு, முனைவர் பர்வீன் சுல்தானா ஆகியோர் ஆவர். கவிப்பேரரசு வைரமுத்து ஏற்புரை வழங்குகிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளை செய்கிறது.












Click it and Unblock the Notifications