கிளாம்பாக்கத்தில் நடை மேம்பாலம்.. ரூ.1615 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள்! இன்று ஸ்டாலின் அடிக்கல்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ரூ.1615.29 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட 6 தென் மாவட்டங்கள் மற்றும் மிக்ஜாம் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் நீர்வளத்துறை சார்பில் 726.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 503 நிரந்தர சீரமைப்பு, வெள்ளத் தணிப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள் மற்றும் தமிழ்நாட்டின் 24 மாவட்டங்களில் 115 கோடி ரூபாய் செலவில் 5814.295 கி.மீ. நீளத்திற்கு 1004 சிறப்பு தூர்வாரும் பணிகள், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 558 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சென்னை தீவுதிடலில் இயற்கை வனப்புடன் கூடிய நவீன நகர்ப்புர பொது சதுக்கத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம், கிளாம்பாக்கத்தில் புதியநடை மேம்பாலம், புதிய பள்ளி வளாகம் கட்டுதல், மேம்பாலங்களின் கீழ் அழகுபடுத்துதல், விளையாட்டு மைதானத்தை புனரமைத்தல், மிதி வண்டி மற்றும் நடைபாதை அமைத்தல், கடற்கரை மற்றும் குளங்களை மேம்படுத்துதல் ஆகிய திட்டப் பணிகள், உயர்கல்வித் துறை சார்பில் 86.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள கல்விசார் கட்டடங்கள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் சென்னை டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் அமையவுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஆகியவற்றுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார்.
மேலும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சென்னை, சைதாப்பேட்டை நாய் வளர்ப்பு பிரிவில் 5 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உள்நாட்டு நாய் இனங்களின் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையத்தின் விரிவாக்கக் கட்டிடம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கட்டப்பட உள்ள 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 மாவட்டங்களில் 40 எண்ணிக்கையிலான மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் மற்றும் 27.50 கோடி ரூபாய் மதிப்பிலான 6 வட்ட செயல்முறைக் கிடங்குகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்,
இப்படி மொத்தம் 1615 கோடியே 29 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.












Click it and Unblock the Notifications