மதுரை & திருச்சியில் பிரமாண்டமாக அமையும் டைடல் பார்க்.. நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மதுரை மற்றும் திருச்சி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு, நாளை (பிப்ரவரி 18) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு அரசு, சென்னையில் தரமணி, பட்டாபிராம் மற்றும் கோயம்புத்தூரை தொடர்ந்து மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. திருச்சியில் திருச்சிராப்பள்ளி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் இந்த டைடல் பார்க் அமைக்கப்படுகிறது.

சுமார் 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 5.58 லட்சம் சதுரடியில் ரூ.315 கோடியில் இந்த டைடல் பூங்கா அமைகிறது. தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் இந்த புதிய டைடல் பார்க் அமைய உள்ளது. இதன் மூலம் சுமார் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
அதேபோல், மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பார்க் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தரை மற்றும் 12 தளங்களுடன் மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ரூ.289 கோடி செலவில் கட்டப்படும் இந்த டைடல் பார்க்கில் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
இந்த இரண்டு டைடல் பூங்கா பணிகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி டைடல் பூங்கா நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. அதனைப் பரிசீலனை செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், திருச்சி, மதுரை டைடல் பூங்காவின் கட்டுமான பணிகளுக்கு நாளை காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின். அதைத்தொடர்ந்து, கட்டுமான பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications